இந்தியாவுக்கு சூப்பர் வெற்றி: மிஸ்ரா சுழலில் பாகிஸ்தான் சரண்டர்
மிர்புர்: உலக கோப்பை ‘டுவென்டி–20’ தொடரை இந்திய அணி
அமர்க்களமாக துவக்கியது. நேற்றைய லீக் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட்
வித்தியாசத்தில் மிகச் சுலபமாக வீழ்த்தியது. ‘சுழலில்’ மிரட்டிய அமித்
மிஸ்ரா, வெற்றிக்கு பெரிதும் கைகொடுத்தார்.
ஐந்தாவது ‘டுவென்டி–-20’ உலக கோப்பை தொடர் வங்கதேசத்தில் நடக்கிறது.
நேற்று மிர்புரில் நடந்த லீக் போட்டியில் ‘பிரிவு–2’ல் இடம் பெற்றுள்ள
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் தோனி
‘பவுலிங்’ தேர்வு செய்தார். அஷ்வின், அமித் மிஸ்ரா, ரவிந்திர ஜடேஜா
சேர்த்து இந்திய அணியில் மூன்று ‘ஸ்பின்னர்கள்’ இடம் பெற்றனர்.
துவக்கம் மோசம்: இந்திய அணியின் துடிப்பான
பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி துவக்கத்திலேயே ஆட்டம் கண்டது. சற்று
வித்தியாசமாக முதல் ஓவரை இம்முறை அஷ்வின் வீசினார். இதில், கம்ரான் ஒரு
பவுண்டரி மட்டும் அடித்தார். அடுத்த ஓவரில் அவசரப்பட்ட கம்ரான் (8),
புவனேஷ்வர் குமாரின் நேரடி ‘த்ரோவில்’ பரிதாபமாக ரன் அவுட்டானார்.
ரவிந்திர ஜடேஜா பந்தில் ஹபீஸ் (15) வீழ்ந்தார். அமித் மிஸ்ராவின்
‘சுழலில்’ ஷேசாத்(22) வெளியேற, பாகிஸ்தான் அணி 8.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு
47 ரன்கள் எடுத்து தத்தளித்தது.
பின் உமர் அக்மல், சோயப் மாலிக் சேர்ந்து போராடினர். யுவராஜ் வீசிய
போட்டியின் 11வது ஓவரில் உமர் அக்மல் 2 பவுண்டரி அடிக்க மொத்தம் 13 ரன்கள்
எடுக்கப்பட்டன. மறுமுனையில் மிஸ்ரா பந்தை சோய்ப் மாலிக் சிக்சருக்கு
அனுப்ப, ‘ஸ்கோர்’ மெல்ல உயரத் துவங்கியது. மீண்டும் பந்துவீச வந்த மிஸ்ரா
இம்முறை மாலிக்கை(18) அவுட்டாக்கி, இந்திய ரசிகர்களுக்கு உற்சாகம் தந்தார்.
ஷமி ‘வேகத்தில்’ உமர் அக்மல்(33) வீழ்ந்தார். புவனேஷ்வர் குமார் பந்தில்
‘ஆபத்தான’ அப்ரிதி(8) அவுட்டாக, தோனிக்கு நிம்மதி பிறந்தது.
ஷமி வீசிய போட்டியின் கடைசி ஓவரில் சோயப் மக்சூத் ஒரு சிக்சர், பவுண்டரி
அடித்து கவுரவமான ஸ்கோரை பெற்றுத் தந்தார். இவர் 21 ரன்களுக்கு ரன்
அவுட்டானார். பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 130 ரன்கள்
எடுத்தது.
இந்தியா சார்பில் அமித் மிஸ்ரா அதிகபட்சமாக 2 விக்கெட் வீழ்த்தினார்.
நல்ல துவக்கம்: சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு
ரோகித் சர்மா, ஷிகர் தவான் சேர்ந்து வலுவான துவக்கம் தந்தனர். ஜுனைடு கான்
ஓவரில் ரோகித் வரிசையாக ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்து அசத்தினார்.
தொடர்ந்து சயீத் அஜ்மல் ஓவரில் தவான் மூன்று பவுண்டரிகள் விளாச, பாகிஸ்தான்
பவுலர்களை பார்க்கவே பாவமாக இருந்தது. உமர் குல் ‘வேகத்தில்’ தவான்(30)
அவுட்டானார். சிறிது நேரத்தில் சயீத் அஜ்மல் வலையில் ரோகித்(24)
சிக்கினார். பிலாவல் பந்தில் யுவராஜ் சிங்(1) அவுட்டாக, லேசான பதட்டம்
ஏற்பட்டது.
அதிரடி ஆட்டம்: பின் விராத் கோஹ்லி, ரெய்னா சேர்ந்து
வெளுத்து வாங்கினர். பவுண்டரி, சிக்சர்களாக விளாசிய இவர்கள், அணிக்கு
விரைவான வெற்றி தேடித் தந்தனர். இந்திய அணி 18.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு
131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கோஹ்லி(36), ரெய்னா(35)
அவுட்டாகாமல் இருந்தனர்.
ஆட்டநாயகன் விருதை அமித் மிஸ்ரா தட்டிச் சென்றார்.
நுாறு சதவீத வெற்றி
‘டுவென்டி–20’ உலக கோப்பை வரலாற்றில், பாகிஸ்தானுக்கு எதிராக
இந்தியாவின் ஆதிக்கம் நீடிக்கிறது. இதுவரை நான்கு முறை (2007, 2007, 2012,
2014) இந்தியா–பாகிஸ்தான் அணிகள் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில் மோதின.
இதில் அனைத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது.
யுவராஜ் ஏமாற்றம்
இந்திய அணியின் ‘பீல்டிங்’ நேற்று எடுபடவில்லை. ‘டுவென்டி–20’
போட்டிகளில் அறிமுகமான முகமது ஷமி பந்தில் ஹபீஸ் 5 ரன்கள் எடுத்த நிலையில்
கொடுத்த ‘கேட்ச்சை’ யுவராஜ் சிங், பிடித்து நழுவ விட்டார். இதனை
பயன்படுத்திய ஹபீஸ் 15 ரன்கள் எடுத்தார். இதே போல பவுண்டரிக்கு செல்லும்
பந்துகளை துடிப்பாக தடுக்கவும் தவறினர்.
பழிதீர்த்தது
சமீபத்தில் இதே மிர்புரில் நடந்த ஆசிய கோப்பை லீக் போட்டியில் இந்திய
அணி, பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது. இதற்கு நேற்று பழிதீர்த்தது.
சபாஷ் தோனி
இந்திய கேப்டன் தோனி வெற்றிப்பாதையை கண்டு கொண்டார். இவரது முடிவுகள்
அனைத்தும் நேற்று மிகச் சரியாக இருந்தன. மூன்று ‘ஸ்பின்னர்களுக்கு’
வாய்ப்பு அளித்தார். மந்தமான ஆடுகளம் மற்றும் பனிப்பொழிவை உணர்ந்து,
முதலில் ‘பவுலிங் தேர்வு செய்தார். இது சரியானது என்பதை நிரூபிக்கும்
வகையில் அமித் மிஸ்ரா(2/22), ஜடேஜா(1/18), அஷ்வின்(0/23) சேர்ந்து 12
ஓவர்களில் 63 ரன்கள் மட்டும் கொடுத்து பாகிஸ்தான் அணியை திணறடித்தனர்.
இவர்கள் மூவரையும் திறமையாக பயன்படுத்திய தோனி, பாகிஸ்தான் அணியின் ரன்
வேகத்தை அப்படியே கட்டுப்படுத்தினார்.
0 comments:
Post a Comment