மேஜர் முகுந்த் குடும்பத்தினரை ஜெய்ஹிந்த் 2 விழா மேடையில் கவுரவப்படுத்திய அர்ஜுன்!
ஜெய்ஹிந்த் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில், எல்லையில் வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த்தின் குடும்பத்தினரை அழைத்து மரியாதை செய்தார் நடிகரும் இயக்குநருமான அர்ஜூன். ஸ்ரீராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக அர்ஜுன் எழுதி, இயக்கி, தயாரித்து நடிக்கும் படம் அர்ஜுனின் ஜெய்ஹிந்த் -2 . கதாநாயகியாக சுர்வீன் சாவ்லா நடிக்கிறார் . புதுமுகமாக சிம்ரன் கபூர் என்ற முன்பை நடிகை ஒருவரும் அறிமுகமாகிறார். மற்றும் ராகுல்தேவ் , பிரம்மானந்தம், ரவிகாளே, அதுல் மாதூர், மயில்சாமி ,மனோபாலா, வினய்பிரசாத், நரசிம்ம ராஜு, கெளதம் சுந்தர்ராஜன், பரத்குமார், அமீத்திவாரி, பேபி யுனிதா ஆகியோர் நடிக்கிறார்கள்.
அர்ஜுன் ஜெனியா இசையமைக்க, வைரமுத்து, பா விஜய் பாடல்கள் எழுதியுள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழா மேடையில்தான் மேஜர் முகுந்த் வரதராஜன் குடும்பத்தினர் கவுரவிக்கப்பட்டனர்.
காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகளுடனான மோதலில் 2 தீவிரவாதிகளைச் சுட்டுக் கொன்று, வீர மரணம் அடைந்தவர் மேஜர் முகுந்த். அவரது தந்தை, மனைவி, மகள் ஆகியோரை மேடைக்கு அழைத்து கவுரவித்தார் அர்ஜுன்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அர்ஜுன் பேசுகையில், "இந்த இசை வெளியீட்டு விழாவை ஜெய்ஹிந்த் படத்தின் தலைப்பிற்கு ஏற்றாற்போல் நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டேன். எங்களுக்கு ரியல் ஹீரோவான மேஜர் முகுந்த் அவர்களின் ஞாபகம் தான் வந்தது.
தேசத்திற்காக உயிர் துறந்த அந்த மேஜரின் குடும்பத்தை அழைத்து அவர்கள் முன்னிலையில் இந்த விழாவை நடத்த விரும்பினேன். முதலில் தயங்கிய அவர்கள் பிறகு ஒத்துக்கொண்டார்கள். அவர்களை மேடைக்கு அழைத்ததன் மூலம் இந்த விழா சிறப்பு பெற்றுள்ளது," என்றார்.
விழா மேடையில் பேசிய மேஜர் முகுந்தனின் தந்தை வரதராஜன், "ஜென்டில் மேன் படத்தை பார்த்து அர்ஜுனின் தீவிர ரசிகரான முகுந்த் ஆக்ஷன் படங்களை விரும்பி பார்ப்பான். இந்த ஜெய்ஹிந்த் படத்தை பார்க்க அவன் இல்லை. இருந்தாலும் இந்த விழாவில் நாங்கள்கலந்து கொண்டதே எங்களுக்கு மகிழ்ச்சி," என்றார்.
தயாரிப்பாளர் கலைபுலி எஸ்.தாணு பேசுகையில், "இது அர்ஜுன் இயக்கத்தில் வரும் எட்டாவது படம் என்றார்கள். அர்ஜுன் இயக்கத்தில் வெளியான எல்லாப் படங்களும் வெற்றிப் பெற்றுள்ளன. இந்த படமும் வெற்றிபெறும்," என்றார். விழாவில் ஐஸ்வர்யா அர்ஜுன், மனோபாலா, கானாபாலா, மயில்சாமி, ஆகியோரும் பேசினார்கள்.
இயக்குனர் பாலா இசைத் தட்டை வெளியிட மேஜர்முகுந்தின் மகள் பேபி ஆர்ஷியா மற்றும் படத்தில் நடித்துள்ள பேபி யுவினா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.