பண்ணாரிஅம்மன் கோவில் மறுபூஜை விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
சத்தியமங்கலம், மார்ச் 24:
சத்தியமங்கலம் பண்ணாரிஅம்மன் கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்ற மறுபூஜை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
பிரசித்தி பெற்ற அருள்மிகு பண்ணாரிஅம்மன் கோவில் குண்டம்
விழா கடந்த மார்ச் 3ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இதையொட்டி,
மார்ச் 11ஆம் தேதி வரை கிராமங்களில் பண்ணாரி அம்மன் உற்சவர் ஊர்வலம்
நடைபெற்றது. அன்றிரவு திருக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சியைத் தொடர்ந்து
நாள்தோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனங்கள்
நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் விழா(மார்ச்.18)
செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள்
கலந்துகொண்டு தீ மிதித்தனர்.இதில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட
கர்நாடக,தமிழக பக்தர்கள் பங்கேற்றனர்.விழாவையொட்டி, கோவில் வளாகத்தில்
வைக்கப்பட்ட உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கைகள்,கடைகள் ஏலம் உள்ளிட்ட
பல்வேறு வருவாய் இனங்கள் கணக்கிட்டபோது அவற்றின் வருவாய் ரூ.1 கோடியை
தாண்டியது. புதன்கிழமை புஷ்பரதம், வியாழக்கிழமை மஞ்சள் நீராட்டு மற்றும்
வெள்ளிக்கிழமை திருவிளக்குப்பூஜையும் அதனைத் தொடர்ந்து தங்கரதம்
புறப்பாடும் நடைபெற்றது.
குண்டம் விழாவை நிறைவு செய்யும் விதமாக திங்கள்கிழமை
மறுபூஜை நடைபெற்றது. அதிகாலை அம்மனுக்கு தங்ககவசம் மற்றும் தங்ககாப்பும்
அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திங்கள்கிழமை காலை முதலே
பக்தர்கள் கோவிலுக்கு வரத்துவங்கினர். பக்தர்கள் நிறைமனை சப்பரம்
எடுத்தும், அலகுகுத்தியும் வேல் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பெண்கள் குண்டத்தில் உப்பை காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர். இரவு
பட்டிமன்றம், ஆன்மீகச் சொற்பொழிவு,வில்லிசை நிகழ்ச்சி போன்றவை நடைபெற்றன.
கோவை, நீலகிரி, ஈரோடு, மேட்டுப்பாளையம்,திருப்பூர்
மற்றும் சத்தியமங்கலத்தில் இருந்து கோவிலுக்கு 200க்கும் மேற்பட்ட சிறப்பு
பேருந்துகள் இயக்கப்பட்டன.
0 comments:
Post a Comment