ஜெ.,வை பாராட்டுகிறேன் : அழகிரி பேட்டி
மதுரை : மதுரையில் தனது ஆதரவாளர்களை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம்
அழகிரி பேசினார். அப்போது அவர் பேசியதாவது : எங்களின் அடுத்த கட்ட
நடவடிக்கை குறித்த ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினேன்; பலரும் அவர்களின்
கருத்துக்களையும், யோசனைகளையும் தெரிவித்துள்ளனர்; இதை வைத்து நான் ஒரு
முடிவுக்கு வர முடியாது; தொடர்ந்து பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகே ஒரு
முடிவுக்கு வர முடியும்; என்னை பொறுத்த வரை கருணாநிதி தான் எப்போதும்
திமுக.,வின் தலைவர்; தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் வேட்பாளர் பட்டியல்
அவர் முடிவு செய்த பட்டியல் இல்லை; கட்சிக்கு சம்பந்தம் இல்லாத பலரின்
பெயர்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது; உதாரணத்திற்கு விருதுநகர்
தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் ரத்தினவேல் கட்சிக்கு
கொஞ்சமும் சம்பந்தம் இல்லாதவர்; புதிதாக கட்சியில் சேர்ந்த பலருக்கும்
வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது; நெல்லை, ராம்நாடு, சேலம், கள்ளக்குறிச்சி என
இப்படி பல தொகுதிகளை சொல்லிக் கொண்டே போகலாம்; எவ்வளவு செலவு செய்வீர்கள்
என கேட்டு அதிகமாக பணம் செலவு செய்பவர்களுக்கே சீட் அளிக்கப்பட்டுள்ளது;
வெற்றி வாய்ப்பை கருத்தில் கொண்டு வாய்ப்பு அளிக்கப்படவில்லை; மதுரை
மேயராக பொறுப்பேற்றுள்ள ராஜன் செல்லப்பாவிற்கு வாழ்த்து தெரிவித்து,
ரத்தினவேல் வாழ்த்து மடல் அனுப்பி உள்ளார்; அவருக்கு கட்சியின் சீட்
அளிக்கப்பட்டுள்ளது; இப்படி இருந்தால் கட்சி உருப்படுமா?; மதுரை விமான
நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவரின் பெயரை வைக்க வேண்டும் என
கேட்டுள்ளோம்; இதனையே பிரதமரை சந்தித்த போதும் நான் வலியுறுத்தினேன்; என்னை
தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசும் போது கார்த்திக்கும் இதனையே
வலியுறுத்தினார்; வேலூரில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்திற்குள் நுழைய
முயன்ற ரகுமான் கானை உள்ளே நுழைய விடாமல் துரைமுருகன் பிரச்னை செய்தார்;
அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?; மாவட்ட செயலாளர்களை வருடத்திற்கு
ஒரு முறையாவது மாற்ற வேண்டும்; அப்போது தான் கட்சி உருப்படும்; அந்த
விஷயத்தில் ஜெயலலிதாவை நான் பாராட்டுகிறேன்; மாவட்ட செயலாளர்கள் ஒழுங்காக
செயல்படாவிட்டால், உடனே நடவடிக்கை எடுக்கிறார்; அந்த கட்டுப்பாடு
திமுக.,வில் இல்லை; மாவட்ட நிர்வாகிகள் அளிக்கும் புகார்கள் கட்சி
தலைவரிடமோ அல்லது பொதுச் செயலாளரிடமோ சென்று சேர்வதில்லை; அதற்கென ஒரு
அடிமை உள்ளார்; அவர் தான் அனைத்து பேக்ஸ்களையும் பெறுகிறார்; ரஜினியின்
ஆதரவாளர்கள் எனது ஆதரவாளர்கள்; அவரை சந்தித்து மனம் விட்டு பேசினேன்; அது
எனக்கு ஆறுதலாக இருந்தது; நமது கட்சி காக்கப்பட வேண்டும் என்ற
கொள்கையுடனேயே செயல்பட்டு வருகிறோம்; கட்சி தலைமை அழைத்தால் வரும் லோக்சபா
தேர்தலுக்காக களத்தில் இறங்கி சுறுசுறுப்பாக பணியாற்றுவோம்; கட்சி தலைமை
அழைக்காவிட்டால் தொடர்ந்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட
நடவடிக்கை குறித்து ஒரு முடிவுக்கு வருவோம். இவ்வாறு அழகிரி
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment