ஏப்ரல் 7 ல் பண்ணாரிஅம்மன் கோயில் குண்டம் திருவிழா
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரிஅம்மன் கோயிலின் அழகிய தோற்றம் |
சத்தியமங்கலம்,
ஜன.29:
பண்ணாரிஅம்மன் கோயில் குண்டம் திருவிழா ஏப்ரல் 7 ம் தேதி
நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள பிரசித்தி
பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் உள்ளது. சுற்றுலா தலமான இக்கோயிலுக்கு ஈரோடு,
திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களிலிருந்தும், அண்டைமாநிலமான
கர்நாடகாவிலிருந்தும் இலட்சக்கணக்காண பக்தர்கள் தினந்தோறும் வந்து
செல்கின்றனர்.
இக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா
நடைபெறுவது வழக்கம். இத்திருவிழாவில் இலட்சக்கணக்காண பக்தர்கள் வரிசையில்
நாள்கணக்கில் காத்திருந்து தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவர். இந்த
ஆண்டு குண்டம் திருவிழா மார்ச் 23 ம் தேதி திங்கட்கிழமை இரவு
பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. மார்ச் 24 ம் தேதி அம்மன் உற்சவர் சப்பரம்
கோயிலில் இருந்து புறப்பட்டு சிக்கரம்பாளையம், இக்கரைநெகமம் புதூர்,
வெள்ளியம்பாளையம், கொத்தமங்கலம், தொட்டம்பாளையம், வெள்ளியம்பாளையம்புதூர்,
அக்கரைத்தத்தப்பள்ளி, அய்யன்சாலை, தாண்டாம்பாளையம், இக்கரைநெகமம்,
கெஞ்சனூர், சத்தியமங்கலம், பட்டவர்த்தி அய்யம்பாளையம், புதுவடவள்ளி,
புதுக்குய்யனூர், ராஜன்நகர் கிராமங்களில் திருவீதிஉலா நடைபெறுகிறது.
மார்ச் 31 ம் தேதி அம்மன் சப்பரம் கோயிலை வந்தடைந்த பின் அன்றிரவு கம்பம்
சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து கோயிலில் தினமும்
மலைவாழ் மக்கள் தாரை,தப்பட்டை, பீனாட்சி வாத்தியத்துடன் அம்மன் புகழ்பாடும்
களியாட்டமும், நித்தியப்படி பூஜையும் நடைபெறும்.
ஏப்ரல் 6 ம் தேதி இரவு
திருக்குளம் சென்று அம்மன் அழைத்து வருதல், 7 ம் தேதி அதிகாலை 4 மணிக்கு
பக்தர்கள் குண்டம் இறங்குதல் நடைபெறுகிறது. ஏப்ரல் 13 ம் தேதி
மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும்
இலட்சக்கணக்காண பக்தர்கள் திருவிழாவில் பங்கேற்பர் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை
அதிகாரிகள், பரம்பரை அறங்காவலர்கள், கோயில் பணியாளர்கள் செய்து
வருகின்றனர்.