தாளவாடி ஸ்ரீ மாரியம்மன் கோவில் குண்டம் விழா
சத்தியமங்கலம்,மார்ச் 20:
தாளவாடி
ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் வியாழக்கிழமை நடந்த குண்டம் விழாவில் பல்வேறு
மலைப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில்
அமைந்துள்ளது ஸ்ரீ மாரியம்மன் கோயில். இக்கோவில் விழா அபிஷேக ஆராதனையுடன்
துவங்கியது. விழாவையொட்டி, அம்மன் சிலைகள் ஊர்வலமாக ஆற்றுக்கு எடுத்துச்
செல்லப்பட்டு அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன்பிறகு, பக்தர்கள்
மற்றும் ஊர் பிரமுகர்கள் படைசூழ அம்மன் சிலைகள் மீண்டும் கோயிலுக்கு
எடுத்து வரப்பட்டு மலர் ஊஞ்சலில் வைக்கப்பட்டது. புதன்கிழமை காலை
அம்மனுக்கு ஆபரணங்கள் வைத்து சிறப்பு அலங்கார பூஜையும் வழிபாடும்
நடைபெற்றது.இதில் பக்தர்கள் கலந்துகொண்டு வரிசையாக நின்று அம்மனை
வழிபட்டனர். அன்றிரவு நடைபெற்ற வீதியுலாவில் மலர் அலங்காரத்தில் அம்மன்
பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதனைத் தொடர்ந்து, வியாழக்கிழமை காலை
நடைபெற்ற குண்டம் விழாவில் பக்தர்கள் ஆரவாரத்துடன் பூஜாரி புட்டுசாமி
குண்டத்தில் இறங்கினார். இதில் கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் 48
கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மலைவாழ் மக்கள் கலந்துகொண்டனர்.
விழாவையொட்டி, கர்நாடக இசை, மயில் ஆட்டம், காவடி ஆட்டம் கத்தி வரிசை
மற்றும் பொம்மை ஆட்டம் நடைபெற்றன. தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில்
கோயிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.
இக்கோவில் வளாகத்தை ஒட்டி இஸ்லாமிய பெரிய பள்ளிவாசலும்
அமைந்திருப்பதால், அப்பகுதி இஸ்லாமியர்கள் ஆதரவுடன் கோயில் விழா
அமைதியுடன் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment