இலங்கைக்கு எதிரான தீர்மானம்: மத்திய அரசுக்கு தமிழருவி மணியன்- சீமான் கண்டனம்!
சென்னை: இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை
ஆதரிக்காத மத்திய அரசுக்கு காந்தீய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன்
மற்றும் சீமான் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் நடந்த போர்க்குற்ற விசாரணை தொடர்பாக ஐ.நா. மனித உரிமை
கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானம் அமெரிக்கா,
இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 23 நாடுகளின் ஆதரவுடன் வெற்றி
பெற்றுள்ளது. இருப்பினும், இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் இதற்கு ஆதரவு
தெரிவிக்கவில்லை.
மத்திய அரசின் இந்த அணுகுமுறைக்கு தமிழக அரசியல் கட்சிகளும், தமிழர்
ஆலுவலர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
காந்திய மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் கூறுகையில், ''தமிழகர்களுக்கு
துரோகம் செய்வதையே மத்திய அரசு கொள்கையாக கொண்டுள்ளது. இதற்கு முன்னர்
தமிழகத்தில் ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சியின் காரணமாகவே ஐ.நா.வில் கொண்டு
வரப்பட்ட தீர்மானங்களை இந்தியா ஆதரித்தது. எப்போதும் போல இப்போதும்
தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்து விட்டது'' என்று கூறியுள்ளார்.
மத்திய அரசின் முடிவு குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
''ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றுதான் நீண்ட நாட்களாக
போராடிக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில், ஐ.நா. மனித உரிமை ஆணையர்
நவநீதம்பிள்ளையின் அறிக்கைக்கு பின் பன்னாட்டு விசாரணைக்கு உத்தரவிட கோரிய
அமெரிக்க தீர்மானம் ஐ.நா.வில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
நமக்கு சம்பந்தமே இல்லாத அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் இந்த
தீர்மானத்தை ஆதரித்த நிலையில், இந்தியா புறக்கணித்தது கண்டிக்கத்தக்கது.
இதன் மூலம் தமிழர்களுக்கு இந்தியா மீண்டும் ஒரு மிகப்பெரிய துரோகத்தை
செய்துள்ளது. போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணையை நடத்தினால் இந்தியா
செய்த உதவிகளும் வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்று பயந்தே மத்திய அரசு
அதனை புறக்கணித்துள்ளது.
அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியிருப்பதன் காரணமாக, இலங்கையில்
நடைபெறவுள்ள சர்வதேச விசாரணைக்கு பிறகு தனி ஈழம் உருவாக வழிபிறக்கும்''
என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment