மேதா பட்கருடன் கலந்துரையாடிய பர்கூர் பழங்குடி குழந்தைகள்
ஈரோட்டுக்கு சனிக்கிழமை வந்த சமூகசேவகி மேதா பட்கருடன் பர்கூர் பழங்குடியின குழந்தைகள் கலந்துரையாடினர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப் பகுதியில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் சுடர் தொண்டு நிறுவனம் சார்பில் பள்ளி செல்லா, பள்ளி இடைநின்ற மாணவர்களுக்காக உண்டு உறைவிட சிறப்புப் பயிற்சி மையம் செயல்படுகிறது.
பர்கூரை சுற்றியுள்ள கொங்காடை, ஒன்னகரை, தம்புரெட்டி, குட்டையூர், சுண்டப்பூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் நாற்பது மாணவர்கள் இம்மையத்தில் பயின்று வருகின்றனர்.
இம் மையத்தில் பயிலும் மாணவர்கள் பல்வேறு காரணங்களால் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் என்பதால், இவர்களுக்கு வெறுமனே பாடபுத்தகங்கள் மட்டுமின்றி ஒரிகாமி என்ற காகிதக்கலை, கல்விச்சுற்றுலா, விளையாட்டு என செயல்வழிக்கல்வி அளிக்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, இம் மையத்தில் பயிலும் மாணவர்கள் சனிக்கிழமை ஈரோட்டுக்கு வந்திருந்த பல்லுயிர் பாதுகாப்பு அறிவியல் ரயிலை காண சுடர் தொண்டு நிறுவனம் மூலம் அழைத்துவரப்பட்டனர். மத்திய அரசின் சார்பில் வந்துள்ள இந்த "அறிவியல் எக்ஸ்பிரஸ்' எனப்படும் இந்த ரயிலின் 16 பெட்டிகளில் ஏறி பல்லுயிர் பாதுகாப்பு குறித்த விளக்கங்களை கண்டு கேட்டு அறிந்தனர்.
அடுத்ததாக ஈரோடு பெரியார் நினைவிடத்துக்குச் சென்று பார்வையிட்டுக் கொண்டிருக்கும்போது, அங்கு வந்திருந்த சுற்றுச் சூழலியலாளரும், சமூகசேவகியுமான மேத்தா பட்கரை இந்தக் குழந்தைகள் சந்தித்து பேசினர். அவரும் சற்று நேரம் இக்குழந்தைகளிடம், மலைக்கிராமங்களில் உள்ள கல்வி வசதிகள், பள்ளி இடைநிற்றல் ஏன் ஏற்படுகிறது என்பது குறித்து கலந்துரையாடினார்.
கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது ஈரோடு செங்குந்தர் கல்விக் கழக செயலர் எஸ்.சிவானந்தன், தமிழக பசுமை இயக்கத் தலைவர் மருத்துவர் வெ.ஜீவானந்தம் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்தப் பயண நிகழ்வில் சுடர் தொண்டு நிறுவன இயக்குநர் எஸ்.சி.நடராஜ், கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் அருணாச்சலம், தாமரைச்செல்வன், பள்ளி ஆசிரியர்கள் மாதப்பன், பெரியசாமி உள்ளிட்டோர் பங்ககேற்றனர்.
0 comments:
Post a Comment