பண்ணாரிஅம்மன் கோயிலில் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
சத்தியமங்கலம், மார்ச் 17:
பண்ணாரிஅம்மன் கோவில் குண்டம் விழாவில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.
தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் பிரசித்தி பெற்றது
பண்ணாரி அருள்மிகு பண்ணாரியம்மன் திருக்கோயில். இக் கோயில் விழா கடந்த 3ம்
தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. விழாவையொட்டி பல்வேறு கிராமங்களில்
பண்ணாரி அம்மன் உற்சவர் ஊர்வலம் நடைபெற்றது.
விழாவையொட்டி, பக்தர்கள் குண்டம் இறங்குவதற்காக 4
இடங்களில் பிளாஸ்டிக் பந்தல் அமைக்கப்பட்டன.குண்டம் வளாகத்தில் சவுக்கு
தடுப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் வரிசைப்படுத்தப்பட்டனர். புதன்கிழமை
முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் அவர்களை வரிசைபடுத்தி
ஒவ்வொரு பந்தலிலும் தங்க வைத்துள்ளனர்.
போக்குவரத்து நெரிச்சலை தடுப்பதற்காக கனரக வாகனங்கள்
பண்ணாரி வழியாக செல்ல செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிவரை
தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கனரக வாகனங்கள் சத்தி, ராஜன்நகர்,
ஆசனூர் ஆகிய இடங்களில் தடுத்து நிறுத்தப்பட்டன. மேலும் பாதுகாப்பு
பணிக்காக 8 மாவட்டங்களில் இருந்து 2500 போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது ஒரே நேரத்தில் ஆண,பெண்கள் பக்தர்கள் குண்டம் இறங்குவதற்கான
வசதிகளும். மேலும் அவர்கள் கோயிலுக்கு சென்று அம்மனை தரிசித்து விட்டு
செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நீண்ட நேரம் பந்தலில்
காத்திருக்கும் பக்தர்களுக்காக மொபைல் கழிப்பறை ஒன்றும் மற்றும் அனைத்து
பக்தர்களும் குளித்துவிட்டு செல்லும் வகையில் தானியங்கி தண்ணீர் குழாய்
ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
குண்டத்துக்கு பக்தர்கள் காணிக்கையாக அளித்த வேம்பு,
ஊஞ்சல் மரத்துண்டுகளை கொண்டு திங்கள்கிழமை இரவு தீக்குண்டம்
வார்க்கப்பட்டது. தீக்குண்டத்தில் மஞ்சள், பூண்டு, புகையிலை மற்றும் உப்பு
ஆகியவற்றை பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தினர். மேலும் நூற்றுக்கணக்கான
பக்தர்கள் வேல்,அம்பு மற்றும் நிறைமனை எடுத்தும் அம்மனுக்கு காணிக்கை
செலுத்தினர். பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில் திருப்பதி மாடல்
உண்டியல்கள் கோவில் வளாகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெறும் குண்டம் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.
கர்நாடக
மாநிலம் மைசூர்,சாம்ராஜ்நகர், தமிழகத்தில் மதுரை, கோவை, சேலம், தருமபுரி
ஆகிய ஊர்களில் இருந்து வேன்,லாரி, கார், பஸ் மூலம் ஆயிரக்கணக்கான
பக்தர்கள் கோயிலுக்கு வந்துள்ளனர். இதேபோன்று, மாட்டுவண்டிகளில் இருந்தும்
பக்தர்கள் வந்துள்ளனர்.
பக்தர்களின் வசதிக்காக கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர்,
மைசூரில் இருந்தும், சத்தி, ஈரோடு,கோவை,திருப்பூர் மற்றும் திருப்பூர் ஆகிய
இடங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.
0 comments:
Post a Comment