தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, March 17, 2014

பண்ணாரிஅம்மன் கோவில் குண்டம் திருவிழா. இலட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர்.

 


சத்தியமங்கலம், மார்ச் 18:

பண்ணாரிஅம்மன் கோவில் குண்டம் விழாவில் இலட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர்.

தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் பிரசித்தி பெற்றது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள பண்ணாரியம்மன் திருக்கோயில். இக்கோயில் விழா கடந்த 3 ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. விழாவையொட்டி சுற்றுவட்டார கிராமங்களில் பண்ணாரி அம்மன் திருவீதிஉலா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சியும், தினமும் மலைவாழ் மக்களின் பாரம்பரிய கம்பம் ஆடுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. குண்டம் இறங்கும் பக்தர்களை வரிசைப்படுத்த குச்சிகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு  கடந்த 4 தினங்களுக்கு முன்பிருந்தே வெளியூர் பக்தர்கள் வரிசையில் இடம்பிடித்து காத்திருந்தனர்.  விழாவையொட்டி,  பக்தர்கள் குண்டம் இறங்குவதற்காக 4 இடங்களில் பிவிசி பந்தல் அமைக்கப்பட்டன.   ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் அவர்களை வரிசைபடுத்தி ஒவ்வொரு பந்தலிலும் தங்க வைக்கப்பட்டனர். போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காக கனரக வாகனங்கள்  பண்ணாரி வழியாக செல்ல செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிவரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கனரக வாகனங்கள் சத்தியமங்கலம், ராஜன்நகர், ஆசனூர் ஆகிய இடங்களில் தடுத்து நிறுத்தப்பட்டன. காவல்துறை டி.ஐ.ஜி கணேசமூர்த்தி தலைமையில், ஈரோடு எஸ்.பி. சிபி சக்ரவர்த்தி மேற்பார்வையில் டி.எஸ்.பி கள் முத்துமாணிக்கம், எஸ்.மோகன் உள்ளிட்ட காவல்துறையினர் 3000 பேர் காவல் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

 
குண்டம் திருவிழாவில் கலந்து கொண்ட லட்சகணக்கான பக்தர்களுக்கு திருக்கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர், சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. ஒரே நேரத்தில் ஆண் ,பெண்கள் பக்தர்கள் குண்டம் இறங்குவதற்கான வசதிகளும்.  மேலும் அவர்கள் கோயிலுக்கு சென்று அம்மனை தரிசித்து விட்டு செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுருந்தன. நீண்ட நேரம் பந்தலில் காத்திருக்கும் பக்தர்களுக்காக தற்காலிக கழிப்பறைகளும் அனைத்து பக்தர்களும் குளித்துவிட்டு செல்லும் வகையில் தானியங்கி தண்ணீர் பீய்ச்சியடிக்கும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. குண்டத்துக்கு பக்தர்கள் காணிக்கையாக அளித்த வேம்பு, ஊஞ்சல் மரத்துண்டுகளை 6 அடி உயரத்திற்கு சீராக அடுக்கி வைக்கப்பட்டது. சரியாக நேற்றிரவு 8 மணிக்கு குண்டத்திற்கு தீயிடப்பட்டது. தீக்குண்டத்தில் மஞ்சள், பூண்டு, புகையிலை மற்றும் உப்பு ஆகியவற்றை பக்தர்கள்  நேர்த்திக்கடனாக செலுத்தினர். மேலும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வேல், அம்பு மற்றும் நிறைமனை எடுத்தும் அம்மனுக்கு காணிக்கை செலுத்தினர். பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில் திருப்பதி மாடல் உண்டியல்கள் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுருந்தன.

 



அதிகாலை 2 மணியளவில் குண்டத்தில் உள்ள நெருப்பு தணல்களை தட்டி சமன்படுத்தி பக்தர்கள் கால்கள் நெருப்பில் புதையா வண்ணம் தயார் செய்யப்பட்டது. பின்னர் 2.30 மணிக்குதெப்பக்குளத்திலிருந்து அம்மன் அழைத்து வர கோயிலிருந்து படைக்கலத்துடன் புறப்பட்டனர். தெப்பக்குளம் சருகு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அம்மன் அழைத்து வரப்பட்டது. 3.50 மணிக்கு அம்மன் படைக்கலம் குண்டத்தை வந்தடைந்தது. கோயில் பூசாரி ராஜசேகர் குண்டத்தின் 4 திசையிலும் மலர்தூவி கற்பூரம் ஏற்றி  சிறப்பு பூஜைகள் செய்தார். கற்பூர ஆரத்தி காட்டியபோது கூடியிருந்த பக்தர்கள் அம்மா பண்ணாரிதாயே என விண்அதிர முழக்கமிட்டனர். சரியாக 4.05 மணிக்கு பூசாரி ராஜசேகர் குண்டம் இறங்கினார். அதைத்தொடர்ந்து அம்மன் சப்பரம் குண்டத்தில் இறக்கப்பட்டது. பின்னர் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக குண்டம் இறங்கினர். குண்டம் இறங்கிய பக்தர்கள் நேராக கோயிலுக்கு சென்று தங்க கவசம் மற்றும் வீணை அலங்காரத்தில் வீற்றிருந்த பண்ணாரிஅம்மனை வழிபட்டு சென்றனர். பெண்கள், ஆண்கள் தங்கள் கைக்குழந்தையுடன் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். தீயணைப்புபடை வீரர்கள் குண்டத்தை சுற்றிலும் பாதுகாப்பு மற்றும் மீட்புபணியில் ஈடுபட்டிருந்தனர். கோவை மண்டல இந்துசமய அறநிலையத்துறை இணைஆணையர் நடராஜன், முன்னாள் எம்எல்ஏக்கள் விடியல் சேகர், செல்விமுருகேசன், சிக்கரசம்பாளையம் ஊராட்சித்தலைவர் செல்வராஜ், வாசவி தங்க மாளிகை உரிமையாளர் பிரபுகாந்த், சத்தி நகர திமுக செயலாளர் வேலுச்சாமி, சத்தி நகராட்சி ஆணையாளர் சரவணக்குமார், நகராட்சித்தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம் மற்றும் கோயில் பரம்பரை அறங்காவலர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் குண்டம் இறங்கினர். மதியம் 3 மணி வரை பக்தர்கள் குண்டம் இறங்கிய பின்பு கால்நடைகள் குண்டத்தில் இறக்கப்படுகிறது. குண்டத்தை சுற்றிலும் பாதுகாப்பு பணிக்காக காவல்துறை, மருத்துவர்கள் குழு,தீயணைப்பு வாகனம் , 108 ஆம்புலன்ஸ் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கர்நாடக மாநிலத்திலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. கோயில் வளாகத்தில் புஞ்சைபுளியம்பட்டி பண்ணாரிஅம்மன் அன்னதானக்குழுவினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். கர்நாடக மாநிலம்  மைசூர்,சாம்ராஜ்நகர், தமிழகத்தில் மதுரை, கோவை, சேலம், தருமபுரி ஆகிய ஊர்களில் இருந்து  வேன், லாரி, கார், பஸ் மூலம்  இலட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்துள்ளனர். இதேபோன்று, மாட்டுவண்டிகளில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர்.

0 comments:

Post a Comment