2ஜி ஸ்பெக்டரம் வழக்கில் அரசுக்கு வருவாய் இழப்பு இல்லை என நிதித்துறை செயலாளர் நீதிமன்றத்தில் ஒப்புதல்
என் மீது போடப்பட்டது பொய் வழக்கு: நீலகிரி மக்களவை திமுக வேட்பாளர் ஆ.ராசா
சத்தியமங்கலம், மார்ச் 16:
2ஜி ஸ்பெக்டரம் வழக்கில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏதும் ஏற்படவில்லை என நிதித்துறை செயலாளர் நீதிமன்றத்தில் ஒப்புதல் அளித்துள்ளார் என்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன் மீது பொய் வழக்குபோட்பட்டதாக நீலகிரி மக்களவை திமுக வேட்பாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
நீலகிரி மக்களவை தொகுதிக்கு திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீண்டும் போட்டியிடுகிறார். தேர்தல் அலுவலகம் திறப்பு விழாவுக்கு வந்த வேட்பாளர் ஆ.ராசாவுக்கு திமுக சார்பில் சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. புன்செய் புளியம்பட்டி, பவானிசாகர் ஆகிய பகுதியில் திமுக தேர்தல் அலுவலங்களை திறந்து வைத்து ஆ.ராசா பேசியது: 2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் ரூ.1 லட்சத்துக்கு 25 கோடி பணம் சம்பாதித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. நான் எங்கள் வீட்டில் 8வது பிள்ளை. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமானவரித்துறையினர் எனது உறவினர்களின் வீட்டு சென்று 33 இடங்களில் சோதனையிட்டனர். ஆனால் அவர்களுக்கு ஒரு பைசா கூட கிடைக்கவில்லை என சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதேபோல, 2ஜி ஸ்பெக்டரம் வழக்கில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏதும் இல்லை என நிதித்துறை செயலாளர் பிரியதர்ச்சினி நீதிமன்றத்தில் ஒப்புதல் அளித்துள்ளார்.தற்போது, அரசு சாட்சியங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் தீர்ப்பு கூறும் தருணம் வந்துள்ளது. நான் ஜெயலலிதாவை போல வாய்தா வாங்க மாட்டேன், நீதிபதியை மாற்றுமாறு கூறமாட்டேன்.நானே நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடுவேன். 1 ரூபாய் ஆக இருந்த செல்போன் கட்டணத்தை 40 பைசாவாக குறைந்தது தவிர எந்த குற்றமும் செய்யவில்லை. நீதிமன்றத்தில் ஆஜரான நாள்களை தவிர சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தொகுதிக்கு வந்த நலத்திட்ட உதவிகள் செய்து வந்தேன்.ஊட்டியில் நிலச்சரிவு ஏற்பட்டபோது ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஒரே வாரத்தில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தேன் என்றார். இதில் புன்செய் புளியம்பட்டி நகர்மன்றத் தலைவர் பி.எஸ்.அன்பு, புளியம்பட்டி நகர செயலாளர் சிதம்பரம், சத்தி ஒன்றிய செயலாளர் எல்.பி.தர்மலிங்கம் உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment