தாளவாடி மலைப்பகுதியில் தொடர்மழை. வனக்குட்டையில் யானைகள் உற்சாக குளியல்.
சத்தியமங்கலம்,
செப்.1. தாளவாடி மலைப்பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால்
வனக்குட்டைகள் நிரம்பி வனவிலங்குகளின் குடிநீர்பிரச்சினை தீர்ந்துள்ளது.
தாளவாடி மலைப்பகுதியில் தாளவாடி, ஆசனூர், தலமலை மற்றும் கேர்மாளம் ஆகிய 4
வனச்சரகங்கள் உள்ளன. இவ்வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கழுதைப்புலி,
கரடி, காட்டெருமை, செந்நாய், மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வகை
விலங்குகள் வசிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததால் ஓடைகள்,
பள்ளங்கள், வனக்குட்டைகள் வற்றி வனவிலங்குகளுக்கு தண்ணீர் பஞ்சம்
ஏற்பட்டது. இதனால் யானை மற்றும் காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் விவசாய
விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதம் செய்தது மட்டுமின்றி குடிநீர் தேடி
அலைந்தன. வனத்துறையினரும் வனவிலங்குகளுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி
செய்யும் பொருட்டு டிராக்டர்கள் மூலம் வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் நீர்
நிரப்பி வந்தனர். இதற்கிடையே கடந்த ஒரு மாதகாலமாக தாளவாடி மலைப்பகுதியில்
தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குளம், குட்டைகள்,
தடுப்பணைகளில் மழைநீர் நிரம்பியுள்ளது. வனப்பகுதியில் காய்ந்து கிடந்த
மரம், செடி கொடிகள் துளிர்த்து பச்சைப்பசேலென காட்சியளிக்கின்றன.
வனவிலங்குகள் வனக்குட்டையில் தேங்கியுள்ள தண்ணீரில் ஆனந்தக்குளியல்
போடுகின்றன. தாளவாடியை அடுத்த கொங்கள்ளி மலைப்பகுதியில் உள்ள குட்டையில்
தினமும் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து நீர் அருந்தி செல்கின்றன.