குஜராத்தை விட தமிழகமே முன்னணி மாநிலம்: மோடிக்கு ஜெயலலிதா பதில்
இந்தியாவிலேயே குஜராத் தான் முதன்மையான மாநிலம் என்று கூறுவது ஒரு மாய
தோற்றம் என்ற முதல்வர் ஜெயலலிதா, மனித வளக் குறியீடுகள் அடிப்படையில்,
அம்மாநிலத்தை விட தமிழகம்தான் முன்னணியில் உள்ளது என்றார்.
தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர
மோடிக்கு பதிலளிக்கும் வகையில், கிருஷ்ணகிரியில் நடந்த அதிமுக பிரச்சாரக்
கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா பேசியது:
"காவிரி நதிநீர்ப் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான மத்திய
ஆட்சியாக இருந்தாலும், பாஜக தலைமையிலான மத்திய ஆட்சியாக இருந்தாலும்,
தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளன. காவிரி
நதிநீர்ப் பிரச்சனையில் தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வரும்
காங்கிரஸ், தி.மு.க., பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை வரும் மக்களவை
தேர்தலில் படுதோல்வி அடையச் செய்ய வேண்டும் என்று உங்களையெல்லாம் கேட்டுக்
கொள்கிறேன்.
அண்மையில், சென்னை மீனம்பாக்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்
கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரும் குஜராத்
முதலமைச்சருமான நரேந்திர மோடி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகத்தை, தி.மு.க-வுடன் இணைத்து, இவர்கள் மக்களைப் பற்றி சிந்திக்கவும்
இல்லை, அக்கறை செலுத்தவும் இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாவிலேயே சதா சர்வகாலமும் மக்களைப் பற்றியே நினைக்கிற ஒரே மக்கள்
இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான். அதனால் தான்,
குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ விலையில்லா அரிசி வழங்கும்
திட்டத்தினை செயல்படுத்தி வருகிறோம். ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு
25,000 ரூபாய் நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை
செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம். பட்டம் மற்றும் பட்டயம் படித்தப்
பெண்களாக இருந்தால், அவர்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்குவதுடன் 50,000
ரூபாய் நிதி உதவியாக வழங்கப்படுகிறது. ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை
கட்டணமில்லா கல்வி வழங்கப்படுகிறது. இது தவிர, விலை ஏதுமின்றி பாடப்
புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், புத்தகப் பைகள்,
உபகரணப் பெட்டிகள் ஆகியவை வழங்கப்படுகின்றன.
மேல்நிலை வகுப்பு மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்கள், மடிக்கணினி
மற்றும் ஊக்கத் தொகை ஆகியவை வழங்கப்படுகின்றன. குடும்ப அட்டைதாரர்களுக்கு
மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி ஆகியவை விலை ஏதுமின்றி
வழங்கப்படுகின்றன. வெண்மைப் புரட்சியை உருவாக்கும் வகையில் விலையில்லா
கறவைப் பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டம்
செயல்படுத்தப்படுகிறது.
சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியத் தொகை
500 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. சூரிய மின்
சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது
போன்று உழவர் பாதுகாப்புத் திட்டம், விரிவான மருத்துவக் காப்பீட்டுத்
திட்டம் என எண்ணற்ற திட்டங்கள் எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட
முன்னேற்றக் கழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மாநகராட்சிகளில் ஏழை, எளிய மக்கள் பசியாற மிகக் குறைந்த விலையில் உணவு
வழங்கப்படும் "அம்மா உணவகங்கள்" ஏற்படுத்தப்பட்டு உள்ளன. காய்கறிகள் விலை
உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள்
துவக்கப்பட்டு உள்ளன. வெளிச் சந்தையில் கிலோ அரிசி 20 ரூபாய்க்கு விற்பனை
செய்யும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறோம். இவை எல்லாம் ஏழை மக்களை
மனதில் வைத்து செயல்படுத்தப்படும் திட்டங்கள் இல்லாமல் வேறு என்ன?
மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவிற்கே வழிகாட்டியாக எனது
தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு
விளங்குகிறது. ஓர் அரசு மக்கள் நலனில் அக்கறை உள்ள அரசா என்பதை கணிக்க
உதவுவது பல்வேறு மனித வளக் குறியீடுகள். இதன் அடிப்படையில் குஜராத்தை விட
தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது.
மொத்த மக்கள் தொகையில் 16.6 விழுக்காடு மக்கள் குஜராத்திலே வறுமைக்
கோட்டிற்கு கீழே உள்ளார்கள். ஆனால் தமிழ்நாட்டில் 11.3 விழுக்காடு மக்கள்
மட்டுமே வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளனர். குழந்தை இறப்பு விகிதத்தில்
தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஆனால், குஜராத் மாநிலம் 11-ஆவது
இடத்தில் இருக்கிறது. இன்னும் சற்று விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால், தமிழ்
நாட்டில் உயிருடன் பிறக்கும் 1,000 குழந்தைகளில் 21 குழந்தைகள் மட்டுமே
ஒரு வயது அடைவதற்குள் இறக்கின்றன.
ஆனால், குஜராத்தில் 1,000 குழந்தைகளுக்கு 38 குழந்தைகள் இறக்கின்றன.
தமிழ்நாட்டில் தாய் இறப்பு விகிதம் 90 என்ற அளவில் இருக்கிறது. ஆனால்,
குஜராத்தில் 122 என்ற அளவில் இருக்கிறது. தமிழ்நாட்டின் உற்பத்தித்
துறையில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களில் 14.3 விழுக்காடு தொழிலாளர்கள்
பட்டதாரிகள். ஆனால், குஜராத்தில் 10 விழுக்காடு தொழிலாளர்களே பட்டதாரிகளாக
உள்ளனர்.
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அதிக மக்கள் பயன்பெறும் ஒரே மாநிலம்
தமிழ்நாடு. ஆனால், இதற்கு முற்றிலும் நேர்மாறான நிலைமை குஜராத்தில்
நிலவுகிறது. மாநிலத்தின் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் தமிழகம் மூன்றாவது
இடத்தில் இருக்கிறது. குஜராத் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.
அந்நிய முதலீட்டை ஈர்ப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் மூன்றாவது இடத்தில்
இருக்கிறது. 2012-2013 ஆம் ஆண்டில் மட்டும் 15,252 கோடி ரூபாய் அந்நிய
முதலீடு பெறப்பட்டு இருக்கிறது. அதே காலகட்டத்தில் குஜராத்தில் 2,676 கோடி
ரூபாய் மட்டுமே அந்நிய முதலீடாக பெறப்பட்டு இருக்கிறது. சிந்தித்துப்
பாருங்கள். 15,252 கோடி ரூபாய் எங்கே? வெறும் 2,676 கோடி ரூபாய் எங்கே?
மென்பொருள் ஏற்றுமதியில் தமிழகம் நான்காவது இடத்தில் இருக்கிறது, ஆனால்
குஜராத் 11-ஆவது இடத்தில் இருக்கிறது.
தமிழ் நாட்டில் உள்ள மொத்த தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 36,996. ஆனால்,
குஜராத்தில் வெறும் 22,220 தொழிற்சாலைகள் தான் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள
தொழிலாளர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 90 ஆயிரம். ஆனால், குஜராத்தில் உள்ள
தொழிலாளர்களின் எண்ணிக்கை வெறும் 10 லட்சத்து 50 ஆயிரம் தான். 2011-ஆம்
ஆண்டு முதல் 2013 வரை தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட்ட சிறு குறு
மற்றும் நடுத்தர தொழில்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 732.
ஆனால், குஜராத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 16 தொழில்கள் தான்
துவங்கப்பட்டன. உணவு தானிய உற்பத்தியில் 2011-2012 ஆம் ஆண்டு 101.51 லட்சம்
மெட்ரிக் டன் என்ற உயர் அளவை எட்டி தமிழகம் சாதனை படைத்துள்ளது. இதற்கான
மத்திய அரசின் விருதும் தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ளது. ஆனால், குஜராத்
மாநிலத்தின் உணவு தானிய உற்பத்தி வெறும் 88.74 லட்சம் மெட்ரிக் டன் என்ற
அளவில் தான் உள்ளது.
2013-2014 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் உணவு தானிய உற்பத்தி 103 லட்சம்
மெட்ரிக் டன் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இது போன்று பல துறைகளில்
குஜராத்தை விட தமிழ் நாடு தான் முதன்மை மாநிலமாக விளங்கிக்
கொண்டிருக்கிறது.
இப்போது நான் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் இந்தியாவிலேயே பலருக்கு
வியப்பை அளிப்பவையாக இருக்கும். பலருக்கு இன்று தான் கண்களை திறந்து
விட்டதைப் போல தோன்றும். இது தான் உண்மை நிலை. இதுவரை எல்லாவற்றிலுமே
இந்தியாவிலேயே குஜராத் தான் முதன்மையான மாநிலம் என்ற ஒரு மாய தோற்றம்
ஏற்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால், அது உண்மை அல்ல. உண்மை நிலை
என்னவென்றால் குஜராத் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதிலேயே கண்ணும்
கருத்துமாக இருந்தது. ஆனால், தமிழ்நாடு எனது தலைமையில் வெற்றுப் பேச்சிலும்
விளம்பர வெளிச்சத்திலும் கவனம் செலுத்தாமல், மக்களுக்குத் தொண்டு
ஆற்றுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தது. சதா சர்வ காலமும் மக்கள் நலன்
பற்றியே சிந்தித்து கர்ம சிரத்தையுடன் கடமை ஆற்றியதால் எனது தலைமையிலான
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு தமிழ் நாட்டில் இத்தனை
சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அங்கம் வகிக்கும் மத்திய
அரசு அமைய நீங்கள் ஆதரவு தந்தால் இதைவிட அதிகமான சாதனைகளை நாங்கள்
நிகழ்த்திக் காட்டுவோம்.
மத்திய அரசின் கொள்கைகளை தீர்மானிக்கும் வலிமையை நீங்கள் அனைத்திந்திய
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வழங்கினால், தமிழகத்திற்கு
தேவையானவற்றை பெற்றுத் தருவதோடு, தமிழக பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு
காண்போம் என்ற உறுதியை நான் உங்களுக்கு அளிக்கிறேன்.
நதிகள் இணைப்புத் திட்டம் - பாஜகவுக்கு சரமாரி கேள்வி
சேலம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, வாஜ்பாய்
ஆட்சிக் காலத்தில் தான் நதிகள் இணைப்புத் திட்டம் கொண்டு வரப்பட்டது
என்றும், இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தால், தமிழகத்தில்
குடிநீர்ப் பிரச்சனை மற்றும் மின்சார தட்டுப்பாடு பிரச்சனைகளுக்கு தீர்வு
காணப்பட்டு இருக்கும் என்று தெரிவித்ததோடு, தமிழக நதிகள் இணைப்பிற்கு
முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார். வாஜ்பாய் ஆட்சிக்
காலத்தில் நதிகள் இணைப்புத் திட்டம் பற்றி பேசப்பட்டதே தவிர, அதை
செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
தமிழகத்தைப் பொறுத்த வரையில், தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு நதிகளை
இணைக்கும் திட்டத்திற்கு இதுவரை எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா
திராவிட முன்னேற்றக் கழக அரசு 100 கோடியே 96 லட்சம் ரூபாய் செலவு
செய்துள்ளது. முதல் மற்றும் இரண்டாம் நிலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மூன்று மற்றும் நான்காம் கட்டப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டு வருகின்றன. பெண்ணையாறு - பாலாறு இணைப்புக்காக 500 கோடி
ரூபாய் மதிப்பில் இரண்டு திட்டங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்ட 4,000 கோடி ரூபாய்
மதிப்பிலான காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை காங்கிரஸ் தலைமையிலான
மத்திய கூட்டணி அரசு நிராகரித்துவிட்டது. மத்திய அரசின் அனுமதிக்காக
அனுப்பி வைக்கப்பட்ட 1,862 கோடி ரூபாய் மதிப்பிலான அத்திக்கடவு-அவினாசி
திட்டத்தையும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு நிராகரித்துவிட்டது. இந்த
நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு தேவைப்படும் 6,500 கோடி ரூபாயை
தமிழ்நாட்டிற்கு வழங்குவோம் என்ற உத்தரவாதத்தை பாரதீய ஜனதா கட்சி அளிக்கத்
தயாரா?
தமிழ்நாட்டில் உள்ள நதிகளை இணைப்பதற்கு இன்றியமையாதது காவிரியில் அதற்கேற்ற
அளவு தண்ணீர் கிடைப்பது தான். அதற்கு மகாநதி - கோதாவரி - காவிரி இணைப்பு
அத்தியாவசியம் ஆகும். இந்த மகாநதி - கோதாவரி - காவிரி இணைப்பினை
நடைமுறைப்படுத்த பாரதீய ஜனதா கட்சி உத்தரவாதம் அளிக்கத் தயாரா?
இது இருக்கட்டும். காவிரியில் தமிழகத்திற்குரிய நீரை எவ்வித தடையுமின்றி
வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தையாவது பாஜக அளிக்கத்
தயாரா? என்பதை அந்தக் கட்சி தெளிவுபடுத்த வேண்டும்; மக்களுக்கு விளக்க
வேண்டும்.
நதிகள் இணைக்கப்படாத சூழ்நிலையிலும், காவிரியில் நமக்குரிய பங்கு
கிடைக்கப்படாத சூழ்நிலையிலும், பல்வேறு குடிநீர்த் திட்டங்களை எனது
தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு நிறைவேற்றி
வருகிறது.
எனவே தான், கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மூலம் தற்போது 3 கோடியே 22
லட்சம் பேருக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஒரு நாளைக்கு
1,759 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. குடிநீர்
விநியோகத்தை அதிகரிக்கும் வகையில் கூடுதலாக 2,880 கோடி ரூபாய் கடந்த 34
மாதங்களில் எனது ஆட்சியில் செலவழிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, கடையநல்லூர் மற்றும் சேலம் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் சோதனை
முறையில் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 19
கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வர இருக்கின்றன. மேலும்,
16 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டிற்கு வர இருக்கின்றன. திருநெல்வேலி
மாநகராட்சிக்கான கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
பேரூராட்சிகளைப் பொறுத்த வரையில் கடந்த மூன்று ஆண்டுகளில் 243 கோடி ரூபாய்
செலவில் 5,895 பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக தற்போது 589
மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. 9,903 ஊரகக்
குடியிருப்புகளில் தனி மின் விசை திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.
கடந்த 34 மாதங்களில் ஊரகப் பகுதிகளில் 1,601 கோடி ரூபாய் செலவில் பல்வேறு
குடிநீர்ப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. மத்திய அரசின் கொள்கைகளை
வகுக்கும் வகையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நீங்கள்
வெற்றி பெறச் செய்தால், எங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு
நதிகள் இணைப்புத் திட்டத்தை நாங்கள் நிறைவேற்றுவோம் என்பதைத் தெரிவித்துக்
கொள்கிறேன்" என்றார் ஜெயலலிதா.
0 comments:
Post a Comment