திம்பம் மலைப்பாதையில் 20 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
திம்பம்
மலைப்பாதையில் இரும்புகம்பி பாரம் ஏற்றிய லாரி பழுதாகி நின்றதால் சத்தி
-மைசூர் சாலையில் 20 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழகம் மற்றும் கர்நாடகத்தை இணைக்கு
முக்கிய பாலமாக உள்ளது திம்பம் மலைப்பாதை. தேசிய நெடுஞ்சாலையில் 27
அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட இந்த மலைப்பாதை வழியாக இரு மாநில
கனரக வாகனங்கள் பயணிக்கின்றன. இந்நிலையில்,பஞ்சாப் மாநிலத்தில் இருந்து
உருண்டை வடிவிலான இரும்புகம்பி பாரம் ஏற்றிய லாரி கேரளா மாநிலம் திருச்சூர்
செல்வதற்காக வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு திம்பம் மலைப்பாதையில்
சென்றுகொண்டிருந்தது. லாரியை சுக்தேவ்சிங்(34) ஓட்டினார். அப்போது, 20-வது
கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது லாரியில் இருந்த இரு பேட்டரிகள்
செயலிழந்ததன. இதனால் நவீன மின்னணு சாதனங்கள் இணைக்கப்பட்ட பிற பகுதிகளிலும்
கோளாறு ஏற்பட்டதின் விளைவாக லாரி அதே இடத்தில் நின்றது. சுமார் 40 டன்
பாரம் கொண்ட இந்த லாரியை உடனடியாக அப்புறப்படுத்த முடியவில்லை.
இந்த புதியரக லாரியில் அனைத்தும் மின்னணு சாதனங்களால்
இணைக்கப்பட்டுள்ளதால் உள்ளூர் லாரி மெக்கானிக்களால் இதை சரிசெய்ய
முடியவில்லை. இதற்கிடையில், பல்வேறு வளைவுகளில் சில லாரிகளின் டயர்கள்
வெடித்து அதே இடத்தில் நின்றதால் சிறு வாகனங்கள் கூட இயக்கப்படவில்லை.
பழுதடைந்த லாரியை சற்று ஓரமாக தள்ளிவைக்க முயற்சியில்
மெக்கானிக்குகள், தொழில்நுட்ப உதவியாளர்கள்,டிரைவர்கள் மற்றும் கலாசு
தொழிலாளர் என 50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு லாரியை மெல்ல மெல்ல
நகர்த்தினர். சுமார் 5 மணி நேர போரட்டத்திற்கு பிறகு லாரி ஓரமாக
அப்புறப்படுத்தப்பட்டது.
இதன் மூலம் கிடைத்த சிறிய இடைவெளியில் ஒரு வழிபாதையில்
மட்டுமே வாகனங்கள் செல்லத் துவங்கின.நண்பகல் 12 மணிக்கு போக்குவரத்து
ஓரளவு சீரமைக்கப்பட்டாலும் 20 மணிநேரம் வரிசையாக காத்திருந்த 500க்கும்
மேற்பட்ட வாகனங்களால் மெதுவாக ஊர்ந்து கீழே இறங்கின.அதன்பிறகு, கீழே
காத்திருந்த வாகனங்கள் வரிசையாக மேலே செல்ல அனுமதிக்கப்பட்டன. அப்பகுதியில்
போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்ப சுமார் 20 மணி நேரமானது
குறிப்பிடத்தக்கது.
வாரத்தில் சில நாள்களால் திம்பம் மலைப்பாதையில்
ஏற்படும் போக்குவரத்தால் மலைப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
இரவு முழுவதும் வனப்பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள்
இயற்கை உபாதைகள் கழிக்க முடியாமல் அவதியுற்றனர். உணவு கிடைக்காமல் 12
மணிநேரம் காத்திருந்ததாக டிரைவர்கள் தெரிவித்தனர்.
அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களை வட்டார
போக்குவரத்து அலுவலர்கள் கண்டுகொள்ளாததால் இது போன்று அடிக்கடி விபத்துகள்
ஏற்படுகின்றன. இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து திம்பம்
மலைப்பாதையில் அதிக பாரம் மற்றும் அதிக உயரமுள்ள சரக்கு வாகனங்களை தடுத்து
நிறுத்த வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு குழு வலியுறுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment