தொடரும் யானைகள் அட்டகாசம்: 500க்கும் மேற்பட்ட வாழைகள் நாசம்
பவானிசாகர் அருகே எரங்காட்டூர் சாஸ்திரிநகர் கிராமத்தில் புகுந்த 3 யானைகள், 200 க்கும் மேற்பட்ட வாழைகளை நாசப்படுத்தி உள்ளன.
பவானிசாகர்
வனச்சரகத்திற்குட்பட்ட விளாமுண்டி வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன.
இந்த யானைகள் தினமும் இரவில் வனத்தை விட்டு வெளியேறி வனப்பகுதியை ஒட்டி
அமைந்துள்ள கோடேபாளையம், அம்மாபாளையம், வெள்ளாளபாளையம், நால்ரோடு,
அண்ணாநகர், சொலவனூர், தொப்பம்பாளையம், கரிதொட்டம்பாளையம், புதுரோடு,
விண்ணப்பள்ளி கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்களை
சேதம் செய்கின்றன.
இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை விளாமுண்டி வனத்தை
விட்டு வெளியேறிய 3 யானைகள் தொப்பம்பாளையம் புளியந்தோப்பு வழியாக வந்து
சாஸ்திரிநகர் ஆசிரியர் பழனிச்சாமி(68) என்பவரது தோட்டத்தில் புகுந்து குலை
தள்ளிய நிலையில் இருந்த கதலி ரக வாழைகளை தின்றும் மிதித்தும்
நாசப்படுத்தின. யானைகளின் சப்தம் கேட்டு அங்கு வந்த விவசாயிகள் யானைகளை
பட்டாசு வெடித்தும் தீப்பந்தங்கள் காட்டியும் விரட்டினர். சுமார் 2 மணி நேர
போராட்டத்திற்கு பின் யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டன.
ஆனால் அவை சிறிதுதூரம் சென்றுவிட்டு மீண்டும் வாழைத்தோட்டத்துக்குள்
புகுந்தன. யானைகளின் அட்டகாசத்தால் 200க்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன.
யானைகள் விவசாய விளைநிலங்களில் புகாவண்ணம் தடுக்க அகழி
வெட்டும் பணி முழுமை பெறாததாலும், எல்பிபீ வாய்க்காலை ஒட்டி உள்ள
பகுதியில் அகழி வெட்டாததாலும் யானைகளால் தொடர்ந்து பயிர்சேதம் ஏற்பட்டு
வருகிறது. அகழி வெட்டும்போது பாறைகள் உள்ளதால் குறிப்பிட்ட ஆழத்திற்கு
வெட்டமுடியததால் யானைகள் சாதாரணமாக அகழியை தாண்டி வந்து விடுகின்றன. எனவே
உடனடியாக அகழி வெட்டும் பணியை துரிதப்படுத்தி பயிர்களை காக்க நடவடிக்கை
எடுக்கவேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல, சத்தியமங்கலம் புளியம்கோம்பை வெங்கிடு
மேஸ்திரி தோட்டத்தில் புகுந்த காட்டுயானைகள் சுமார் 400க்கும் மேற்பட்ட
வாழைகளை தின்றும் மிதித்தும் நாசப்படுத்தியுள்ளன. தினந்தோறும் இரவு
தோட்டத்தில் புகுந்த யானைகளை விரட்டியடிக்க வேண்டும் என அப்பகுதி
விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment