நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து மாநிலங்களவை எம்பி திருச்சி சிவா பிரச்சாரம்
நீலகிரி மக்களைவை தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து
மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா புஞ்சைபுளியம்பட்டி மற்றும்
சத்தியமங்கலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். முன்னதாக
புளியம்பட்டி திருவிக திடலில் நடைபெற்ற கூட்டத்திற்கு நகர செயலாளர்
சிதம்பரம் தலைமை தாங்கினார். நீலகிரி தொகுதி தேர்தல் பொறுப்பாளர்
அருண்குமார், பவானிசாகர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் தர்மலிங்கம்,
நகராட்சி தலைவர் அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திருச்சி சிவா
பேசியதாவது. தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் மேல்நிலை நீர்த்தேக்க
தொட்டி கட்டும் திட்டத்தை கொண்டு வந்தவர் திமுக தலைவர் கருணாநிதி.
விபிசிங், தேவகவுடா மற்றும் ஐ.கே.குஜ்ரால் ஆகியோரை பிரதமராக்கியது
கருணாநிதி. விபிசிங் ஆட்சி காலத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பில்
பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு, காவரி பிரச்சினையில் நடுவர் மன்றம்,
இடைக்கால தீர்ப்பில் 205 டிஎம்சி நீர் பெற்றுத்தந்தது கருணாநிதி. தற்போது
ஊரெல்லாம் பறந்து பறந்து வரும் ஜெயலலிதா எதிர்க்கட்சித்தலைவராக
இருந்தபோது ஏதாவது ஒரு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றாரா. மாநாடு நடத்தி
தீர்மானங்கள் நிறைவேற்றினாரா. போராட்டங்கள் நடத்தி சிறை சென்றிருக்கிறாரா
இல்லையே. ஆனால் நமது தலைவர் கருணாநிதி நடத்திய மக்களுக்காக நடத்திய
போராட்டங்கள் எத்தனை என்று எண்ணி சொல்லமுடியாது. தற்போது எல்லாதிட்டங்களும்
தலைமைசெயலகத்திலிருந்து காணொலிக்காட்சி முலம் துவக்கி வைக்கப்படுகிறது.
சினிமாவிலும் காணொலிக்காட்சி, ஆட்சியிலும் காணொலிக்காட்சி நல்ல ஆட்சி
காணொலிகாட்சி ஆட்சி நடைபெறுகிறது தமிழகத்தில். அதிமுக அரசில் அமைச்சர்களாக
உள்ளவர்களுக்கு தகுதி என்னவென்றால் யோகா தெரிந்திருக்கவேண்டும். அது
எதற்காக என்பது நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. இப்படிப்பட்டவர்களையா
நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுப்பது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி
வைக்கவேண்டுமானால் நீங்கள் தவறாமல் உதயசூரியனுக்கு வாக்களித்து ஆ.ராசாவை
பெருவாரியான வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும் என்று
பேசினார். இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை திப்பு சுல்தான்
ரோட்டில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார். இந்நிகழச்சியில் சத்தி நகர
செயலாளர் வேலுச்சாமி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட
திமுகவினர் திரளாக கலந்த கொண்டனர்.
0 comments:
Post a Comment