சத்தியமங்கலம், ஆக. 8–
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி திம்பத்தில் சிறுத்தைகள் அடர்ந்த காட்டை விட்டு வெளியேறி ரோட்டோரம் சுற்றிக்கொண்டு இருக்கின்றன.
பண்ணாரியில் இருந்து திம்பத்துக்கு செல்ல 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இதில் 24,26 மற்றும் 17–வது வளைவுகளில் பல தடவை வாகன ஓட்டிகள் சிறுத்தைகள் நடமாட்டத்தை நேரில் பார்த்துள்ளனர்.
தாளவாடியை சேர்ந்த வேன்டிரைவர் முகமது இலியாஸ் மற்றும் திம்பம் செக்போஸ்டில் பணியில் இருந்த வனக்காப்பாளர் கிருஷ்ணன் ஆகிய 2 பேரை சிறுத்தை அடுத்தடுத்து அடித்து கொன்று அவர்களின் உடலையும் தின்றது.
இதனால் திம்பம் பகுதியில் செல்ல வாகன ஓட்டிகளும், சுற்றுலா பயணிகளும் பீதி அடைந்தனர். திம்பம் மலை சுற்றுப்பாதையில் மாலை மற்றும் இரவு நேரத்தில் செல்ல இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.
இதற்கிடையே 2 பேரை கொன்ற அந்த ஆட்கொல்லி சிறுத்தையை பிடிக்க வன அதிகாரிகள் தீவிரமாக இறங்கினர். திம்பம் பகுதியில் சில குறிப்பிட்ட பகுதிகளில் 4 கூண்டுகள் அமைக்கப்பட்டன.
இதில் ஒரு கூண்டில் சிறுத்தை சிக்கியது. பிடிபட்ட அந்த சிறுத்தை சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆட்கொல்லி சிறுத்தை பிடிபட்டதால் திம்பம் பகுதியில் உள்ள மக்களும், ரோட்டோரம் டீக்கடை வைத்திருக்கும் வியாபாரிகளும் அங்கு சுற்றுலா செல்லும் சுறுறுலா பயணிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
ஆனால் அது நீடிக்கவில்லை. சிறுத்தை பிடிபட்ட 4 தினங்களிலேயே திம்பம் பகுதியில் ரோட்டோரம் மீண்டும் சிறுத்தை நடமாட்டத்தை வாகன ஓட்டிகளும், வன ஊழியர்களும் பார்த்து உள்ளனர்.
இதனால் திம்பம் வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை வன ஊழியர்கள் ரோந்து சென்று எச்சாத்த வண்ணம் இருந்தனர். ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி ரோட்டோரம் நிற்பவர்களையும் வன ஊழியர்கள் ‘‘இங்கே நிற்க வேண்டாம். ஆபத்தான பகுதி சென்று விடுங்கள்’’ என எச்சரித்து அனுப்பி வந்தனர்.
இந்த நிலையில் அனைவரையும் மேலும் அதிர்ச்சி அடைய வைக்கும் வகையில் திம்பம் பகுதியில் நேற்று இரவு மீண்டும் ஒருவரை சிறுத்தை அடித்து கொன்றது. இந்த திகில் சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–
சத்தியமங்கலம் வனப்பகுதி திம்பத்தை அடுத்த காளி திம்பத்தை சேர்ந்தவர் ரேசன்(வயது 40). இவரது பசுமாடு காட்டுப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தது. மாலையில் அது வீடு திரும்பவில்லை. இதையடுத்து ரேசன் மாட்டை தேடி தன் வீட்டையொட்டி உள்ள காட்டு பகுதிக்கு நேற்று இரவு 7.30 மணியளவில் சென்றார்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த ஒரு சிறுத்தை அவர் மீது பாய்ந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத அவர் திடுக்கிட்டு சிறுத்தையின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றார்.
ஆனால் அந்த சிறுத்தையோ ஆவேசத்துடன் பாய்ந்து அவரது கழுத்தை கடித்து ரத்தம் குடித்தது. இதனால் ரேசனால் சிறுத்தையின் ஆக்ரோச பிடியில் இருந்து தப்ப முடியாமல் போய்விட்டது. சிறிது நேரத்திலேயே அவர் சம்பவ இடத்தில் இறந்து போனார்.
இதற்கிடையே அவர் தேடி சென்ற பசுமாடு வீட்டுக்கு திரும்பி வந்துவிட்டது. மாட்டை தேடிபோன ரேசன் திரும்பி வராததால் பதட்டம் அடைந்த அவரது உறவினர்கள் மற்றும் காளிதிம்பம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காட்டுப்பகுதிக்கு சென்று தேடினர். அப்போது ரேசன் சிறுத்தையால் தாக்கப்பட்டு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு வன ஊழியர்களும் அதிரடி படையினரும் விரைந்து சென்றனர்.
மேலும் தலமலை ரேஞ்சர் ராமராஜும் சம்பவ இடத்துக்கு சென்று ரேசன் உடலை பார்வையிட்டார்.
பிறகு அவரது உடல் பிரேத பாசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிறுத்தை தாக்கி பலியான ரேசனுக்கு சரோஜா(35) என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகள் மற்றும் 2 ஆண் குழந்தைகள் என 5 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் ரேசன் உடலை பார்த்து கதறி அழுத காட்சி பரிதாபமாக இருந்தது.
0 comments:
Post a Comment