சென்னை: சினிமா கூற வரும் கருத்தை கேட்காமல் அதன் வாயை மூடுவது பாசிசம் என்றும், தமிழிலில் பட தலைப்பு வைக்க கேட்போர் நிஜத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் உலக நாயகன் கமல்ஹாசன் தெரிவித்தார். கமல்ஹாசன் உலகதரம் வாய்ந்த தமிழ் படைப்பாளி, கலைஞர். ஆனால் இவரது திரைப்படங்கள் வெளியாகும்போதெல்லாம், தமிழகத்தில் எத்தனையோ தடைகளை அவர் எதிர்கொள்ள வேண்டிவந்தது. தங்கள் மண்ணின் சிறந்த கலைஞர்களை தலைக்கு மேல் தூக்கி வைத்து கொண்டாடுவது உலக வழக்கம். ஆனால் தமிழ்நாட்டிலோ தலைக்குமேல் தூக்காவிட்டாலும் பரவாயில்லை, காலுக்கு கீழ் போட்டு மிதிப்பதில்தான் அதிகம் பேருக்கு ஆர்வம் அதிகம்.
மும்பை எக்ஸ்பிரஸ் என்று நான் தலைப்பு வைத்ததற்கு, சிலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதில் ஆங்கில வார்த்தை உள்ளதாம். எனக்கு தெரிந்து, மும்பை எக்ஸ்பிரஸ் என்பதற்கு தமிழில் வார்த்தையே கிடையாது. ஆங்கில கலப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள், தங்களது காதலிகளிடம் 'ஐ லவ் யூ' என்பதை தமிழில் கூறியிருக்கமாட்டார்கள். நன்றியை பலரும் தமிழிலில் கூறுவது கிடையாதே. ஒரு வண்டி கிடைத்துவிட்டது என்பதற்காக அதன்மீது இலவச சவாரி செய்வது மடத்தனமானது.
ஹேராம் திரைப்படத்தின் போஸ்டரை பார்த்துவிட்டு, படம் ரிலீஸ் ஆகும் முன்பே, ஒரு மூத்த அரசியல் தலைவர் அந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். படம் மகாத்மா காந்திக்கு எதிரானதாக இருப்பதாக போஸ்டரை வைத்தே முடிவு செய்தார் அவர். சண்டியர் என்ற பெயரில் ஒரு படத்தை வெளியிட முயன்றபோது, கலாசாரம், அரசியல் ரீதியாக எதிர்ப்பு வந்து படத்தின் பெயரை மாற்ற வேண்டியதாயிற்று. ஆனால், சமீபத்தில் சண்டியர் என்ற பெயரில் ஒரு தமிழ் படம் வெளியாகியுள்ளது.
விஸ்வரூபம் திரைப்படத்தை எதிர்த்தவர்களுக்கு, முன்கூட்டியே திரையிட்டு காட்டியபோது, அவர்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்றுதான் கருதினேன். ஆனால் படத்தை மறுக்கும் உந்தப்பட்ட எண்ணத்திலேயே அவர்கள் இருந்தனர். நான் இப்போதும் விஸ்வரூபம் திரைப்படத்தில் எந்த தவறும் இல்லை என்றுதான் கூறுவேன். அதில் இந்திய முஸ்லிம்கள் குறித்து எந்த குற்றச்சாட்டையும் நான் கூறவில்லை. நான் தவறு செய்திருந்தால் அதை திருத்திக்கொள்வேன், சரி என்றுபட்டால் அதிலே உறுதியாக இருப்பேன்.
எல்லா மதத்திலுமே, சிலர் விவரம் குறைந்தவர்களாக இருப்பார்கள், சிலர் விவரமானவர்களாகும், நடுநிலையோடும் இருப்பார்கள். சினிமா என்பது ஒரு குரல். அந்த குரலை ஒலிக்கவிடாமல் தடுப்பதும் ஒரு வகையில் பாசிசம்தான். கலையை மலர விடாத அனைவரையும்தான் நான் குற்றம்சாட்டுவேன்.
மக்கள் சினிமாவை மிகவும் சீரியசான ஊடகமாக பார்ப்பதால்தான், படங்களுக்கு எதிராக சர்ச்சைகள் வெடிப்பதாக கருதிவிட முடியாது. சில அரசியல்வாதிகள்தான் சினிமாவுக்கு இப்படி முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் சினிமாவை மட்டுமல்ல, அரசியல்வாதிகளையுமே மக்கள் மிகவும் சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை. இவ்வாறு கமல் ஹாசன் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment