தாளவாடி மலைப் பகுதியில் குடிநீர் கோரி சாலை மறியல்
தாளவாடி மலைப் பகுதி, பனஹள்ளி கிராமத்தில் குடிநீர் கேட்டு அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர் .நடப்பாண்டு பருவ மழை பொய்த்துவிட்டதால் தாளவாடி மலைப் பகுதியில் உள்ள குளம், குட்டைகள் மற்றும் வன ஓடைகள் வறண்டு காணப்படுகின்றன. மலைக் கிராமங்களில் உள்ள கிணறுகளின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது. ஆழ்துளைக் கிணறுகளும் நீரின்றி வறண்டுவிட்டன. இதனால் கால்நடைகளுக்கு உயிர்த் தண்ணீர்கூட கிடைக்காமல் கிராம மக்கள் அவதியுற்று வருகின்றனர்.
இந்நிலையில், எரனஹள்ளி கிராமத்தில் 15 நாள்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் தாளவாடி - திகனாரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, தாளவாடி காவல் ஆய்வாளர் பழனியப்பன், திகனாரை ஊராட்சித் தலைவர் காளநாயக்கர் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, புதியதாக ஆழ்துளைக் கிணறு அமைத்து குடிநீர் விநியோகம் செய்ய உறுதியளிக்கப்பட்டதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
0 comments:
Post a Comment