புன்செய் புளியம்பட்டியை அடுத்துள்ள எம்.கவுண்டம்பாளையத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவியர் மற்றும் கிராம அறிவு மையம் சார்பில் மண்வள பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவியர் சந்தியா, கிருத்திகா, யவன காவியா, நஸ்ரின், சலோமி, நர்மதா, மதுபிரியங்கா, லிகிதா, யாழினி, செந்தமிழ் செல்வி ஆகியோர் மூன்று மாதங்களாக களப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அதில் ஒரு பகுதியாக கிராம தங்கல் திட்டம் மூலம் புன்செய் புளியம்பட்டியை அடுத்துள்ள எம்.கவுண்டம்பாளையத்தில் முகாம் இட்டுள்ளனர். அவர்கள் தினசரி ஊர் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் மாணவ மனைவியர்களை சந்தித்து இயற்கை வேளாண்மை, நவீன வேளாண்மை, மண்வள பாதுகாப்பு, குப்பைகளை தரம் பிரிதல், நில மற்றும் நீர் ஆதாரங்களை பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
நேற்று மண்வளத்தை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு எம்.கவுண்டம்பாளையம் ஊராட்சி நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயபாரதி தலைமை வகித்தார். கிராம அறிவு மையத்தின் இயக்குனர் கந்தசாமி, விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன், விஸ்வநாதன், கமலகண்ணன், லோகநாதன், இரும்பறை ஊராட்சி தலைவர் சக்திவேல், டாக்டர் சுப்பண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி நடுநிலை பள்ளி மாணவ மாணவியர்கள் மண்வளம் காப்போம், மண் பரிசோதனை செய்வீர், மண்ணின் வளமே மனிதனின் நலம், விளை நிலத்தை விலை நிலம் ஆக்காதீர், மண்வளம் பெருக தொழுஉரம் இடுவீர் உள்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய அட்டையை ஏந்தியும், கோசம் இட்டும் ஊர் முக்கிய வீதிகளில் வலம் வந்தனர். பின்னர் மண்வள பாதுகாப்பு குறித்து மாணவ மாணவியர்கள் உரை ஆற்றினர்.
இந்நிகழ்ச்சியில் எம்.கவுண்டம்பாளையம் ஊர் பொதுமக்கள், நடுநிலை பள்ளி மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள், வேளாண் பல்கலை கழக மாணவியர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment