ஆடிப்பெருக்கு விழாவை ஒட்டி மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரையில் குவிந்த பக்தர்கள் தமது முன்னோர் நினைவாக படையலிட்டும், பூஜை செய்தும் வழிபட்டனர்.
ஆடிப்பெருக்கை முன்னிட்டு, அதிகாலை முதலே அருள்மிகு வனபத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. பவானி ஆற்றங்கரையில் குவிந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள், ஆற்றில் புனித நீராடிவிட்டு, கரையோரம் ஏழு கற்களை வைத்து தங்களது முன்னோர்களுக்கு பிடித்த உணவு வகைகள்,காய்கறிகள் ஆகியவற்றை படையலிட்டு சப்தகன்னியரை வழிபட்டனர்.
ஆடி விழாவையொட்டி கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. அம்மனுக்கு பாலபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனையும் நடைபெற்றது. அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள், சிம்ம வாகனத்தின் முன்பு எலுமிச்சை தீபமேற்றி அம்மனை வழிபட்டனர்.
கோவிலுக்கு கணவருடன் வந்த புதுமணப் பெண்கள், அம்மனை வழிபட்டுபவானி ஆற்றங்கரையில் புதிய தாலிக்கயிறை அணிந்து கொண்டனர்.
கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. பக்தர்களின் கூட்டம் அதிகமிருந்ததால், ஆற்றில் அசம்பாவிதம் ஏற்படாதிருக்க, கரையோரப் பகுதியில் கயிறுகட்டி, ஆழமான பகுதிக்கு யாரும் சென்றுவிடாமல் பரிசல் மூலம் ,தீயணைப்பு வீரர்கள்,மற்றும் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.கோவில் உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் நா.பழனிக்குமார்,பரம்பரை அறங்காவலர் ஆர்.வசந்தா,மற்றும் கோவில் பணியாளர்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
நெல்லித்துறை சாலையிலுள்ள அணைத்து இந்து சமுதாய சங்க நந்தவனத்தில் தலைவர் சி.பி.எஸ்.பொன்னுசாமி தலைமையில் நிர்வாகிகள் ,உறுப்பினர்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். அதிகாலை முதலே கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு பகுதிகளிலிருந்து குவிந்த பக்தர்கள், அருகிலிருந்த பவானி ஆற்றில் முன்னோர் நினைவாக வழிபட்டனர். ஆடிப் பெருக்கையொட்டி, நகரிலுள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
0 comments:
Post a Comment