மேட்டூர் அணை இன்று மாலை திறப்பு: 12 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை
சேலம், ஆக.10–
மேட்டூர் அணையில்
இருந்து இன்று மாலை முதல் காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர்
திறந்துவிடப்பட உள்ளதால் காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு
வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சேலம் துணை
கோட்ட அதிகாரி ஆர்.கோவலன் காவிரி கரையோரத்தில் உள்ள 12 மாவட்ட
அதிகாரிகளுக்கும் இ.மெயில் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை தகவல் அனுப்பி
உள்ளார். அதில் மேட்டூர் நீர்மட்டம் 110 அடியை நெருங்கி விட்டதாலும்
அணையில் இருந்து தண்ணீர் திறக்கப் பட இருப்பதாலும் காவிரி கரையோரப்
பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க
வைக்குமாறு உத்தர விடப்பட்டுள்ளது.
காவிரி கரையோரத்தில் உள்ள
தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, நாகை,
திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர் ஆகிய 12 மாவட்டங்களுக்கு இந்த
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக மேட்டூர் நீர் மட்டம் 110
அடியை தொடும்போது முதலாவது வெள்ள எச்சரிக்கை விடப்படும். 115 அடியை தொடும்
போது 2–வது எச்சரிக்கை விடப்படும். அணை நிரம்பியதும் இறுதி எச்சரிக்கை
விடப்படும்.
இதையடுத்து ஈரோட்டில் காவிரி கரையோர பகுதிகளில் நேற்று இரவு முதல் ‘‘தண்டோரா’’ மூலம் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது.
இதேபோல்
மேட்டூர் அணையையொட்டி உள்ள தங்கமாபுரி பட்டணம், பெரியார் நகர், அண்ணா
நகர், தொட்டில்பட்டி, கோல் நாயக்கன்பட்டி போன்ற பகுதிகளில் வசிக்கும்
பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தண்டோரா மூலம் எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment