திரையரங்குகள் நவீன கோவில்களாக மாறிவிட்டன - கவிஞர் அப்துல் ரகுமான்
திரையரங்குகள் நவீன கோவில்களாக மாறிவிட்டன; கட்அவுட் தெய்வங்களுக்கு
தான் ஆராதனையும், அபிஷேகங்களும் நடக்கின்றன என கவிஞர் அப்துல் ரகுமான்
வேதனையுடன் தெரிவித்தார்.
ஈரோடு புத்தகத் திருவிழாவில் தட்டினால் திறக்குமா என்ற தலைப்பிலான கவியரங்குக்கு தலைமை வகித்து, அவர் பேசியது:
எதையும் தேடினால்தான் கிடைக்கும், தட்டினால் தான் கதவுகள் திறக்கும்,
இது தான் இறை விதி. துன்பம் மனிதர்களை தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்றால்
திறக்கப்படாத கதவுகளை அவர்கள் தட்டுகிறார்கள் என்று பொருள். உலகில் சிலர்
திறக்கப்படும் கதவுகளை தட்டுகின்றனர். பலர் திறக்கப்படாத கதவுகளையே
தட்டுகின்றனர்.
மனித உரிமைகள் கூட மயில் இறகு போல இக்காலத்தில் ஆகிவிட்டது.
திரையரங்குகள் நவீன கோவில்களாக மாறிவிட்டன. கட்-அவுட் தெய்வங்களுக்கு தான்
இப்போது ஆராதனைகளும், அபிஷேகங்களும் நடக்கின்றன. கும்பகோணத்தில் 10
ஆண்டுகளுக்கு பின்புதான் நீதிமன்ற கதவு திறந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு
முன்பு குழந்தைகளின் இதயம் தீக்கிரையானது. இன்று பெற்றோர்களின் இதயத்தை
எரித்துவிட்டனர். நிதியை நீட்டினால்தான் நீதி கிடைக்கிறது.
கல்வி நிலைய கதவுகள் காசு போட்டால்தான் திறக்கின்றன. ஒரு காலத்தில்
சிறைக்கு போய் வந்தவர்கள் அரசியல்வாதிகளாக இருந்தனர். ஆனால் இன்று சிறைக்கு
போக வேண்டியவர்கள் தான் அரசியல்வாதிகளாக இருக்கின்றனர் என்றார்.
கவியரங்கில் அமைச்சர் வீட்டுக் கதவு என்ற தலைப்பில் கவிஞர்
பழனிபாரதியும், கல்வி நிலையக் கதவு என்ற தலைப்பில் கவிஞர் நெல்லை
ஜெயந்தாவும், நீதிமன்றக் கதவு என்ற தலைப்பில் கவிஞர் கபிலனும், ஆலயக் கதவு
என்ற தலைப்பில் கவிஞர் நந்தலாலாவும் கவி பாடினர்.மக்கள் சிந்தனைப் பேரவைத்
தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் அறிமுக உரையாற்றினார். சேஷசாயி காகித ஆலை
நிறுவன நிர்வாக இயக்குநர் கே.எஸ்.காசி விஸ்வநாதன் தலைமை வகித்தார்.
0 comments:
Post a Comment