விவசாயிகளை காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை:தமிழக விவசாயிகள் சங்க தலைவர் சிவசாமி
***************************************************************************************
பம்ப்செட்
மூலம் ஆற்றுநீர் உபயோகிக்கும் விவசாயிகளை காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை
எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்க தலைவர் சிவசாமி கோரிக்கை
விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை சத்தியமங்கலத்தில்
வெளியிட்ட அறிக்கையின் விபரம்:பவானி ஆற்றில் பல ஆண்டுகளாக அருகாமையில் உள்ள
கிராம விவசாயிகள் பம்ப்செட் வைத்து விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த
வாரத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி ஆற்றுநீர் உபயோகிக்கும் பம்ப்செட்
மின்இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். உடனடியாக இந்த
நடவடிக்கையை தடுத்து நிறுத்துமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.
கர்நாடகாவிலும், கேரளாவிலும் ஆற்று நீரை பம்ப்செட் உபயோகித்து விவசாயம்
செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. கரூர், நாமக்கல் மாவட்டங்களில் காவிரி ஆற்று
நீர் பம்ப்செட் மூலம் பல கிலோமீட்டர் தூரத்திற்கு பைப்லைன் பதித்து நீர்
எடுத்து சென்று விவசாயம் செய்ய தமிக அரசு அனுமதி கொடுத்துள்ளது.
நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுத்தால்
பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களில் உள்ள பயிர்கள் காய்ந்துவிடும். பவானிசாகர்
அணையில் பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும், பம்ப்செட் பாசனத்திற்கும்
தேவையான அளவு தண்ணீர் உள்ளது. கெயில் எரிவாயு பைப்லைன் பிரச்சினையில் தமிழக
அரசு தலையிட்டு விவசாயிகளுக்கு சாதகமான நிலை எடுத்தது.
அதேபோல் நீதிமன்ற உத்தரவுப்படி பவானி நீர் பம்ப்செட்
மின்இணைப்பை துண்டிப்பு செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாமல்
காப்பாற்ற தமிழக அரசு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்குமாறும், நீதிமன்றத்தில்
தடையாணை பெற கால அவகாசத்தை நீட்டித்து தருமாறு தமிழக அரசை கேட்டுக்
கொள்கிறேன். இதுசம்பந்தமாக இப்பகுதி விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு
தமிழக விவசாயிகள் சங்கம் ஆதரவு அளிக்குமெனவும், போராட்டத்தில் கலந்து
கொள்ளுமெனவும், இது சம்பந்தமான தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனைக்கூட்டம்
இவ்வார இறுதியில் சத்தியமங்கலத்தில் நடைபெறும் என அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது
0 comments:
Post a Comment