விவசாய மின்இணைப்புகள் துண்டிப்பை கண்டித்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் சாலைமறியல்
**********************************************************************************
பவானிசாகர்
பவானி ஆற்றோர பகுதியில் உள்ள விவசாய கிணற்று மின்இணைப்புகளை மின்வாரிய
அலுவலர்கள் துண்டித்து வருவதை கணடித்து சத்தி கோவை சந்திப்பில்
ஆயிரக்கணக்கான விவசாயிகள் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பவானிசாகர் அணைப்பகுதியில் இருந்து கொடிவரை வரை உள்ள
ஆற்றங்கரையோரப் பகுதியில் கிணறு அமைத்து மின்மோட்டார் மூலம் விவசாயிகள்
நீர்இறைத்து விவசாயம் செய்து வருகின்றனர். கிணற்றில் இருந்து 20 கிமீ
தூரம் வரை குழாய் அமைத்து விவசாயிகள் பாசனவசதி பெறுகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக மின்வாரிய
அலுவலர்கள் பவானிசாகர், எரங்காட்டூர், தொட்டம்பாளையம் ஆற்றோர விவசாயக்
கிணற்று மின்இணைப்புகளை துண்டித்து வருகின்றனர். இதனால் சத்தி, பவானிசாகர்
பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன்
எதிர்காலம் கேள்விக்குறியாகும் என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கிடையில், சத்தி, அத்தானி, கள்ளிப்பட்டி,
தயிர்பள்ளம், ஆலாம்பாளையம், பவானிசாகர், சிவியார்பாளையம்,
எரங்காட்டூர், அரியப்பம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த
பவானி நீரேற்று விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் மலர்
உற்பத்தியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த 100 பெண் உட்பட ஆயிரத்துக்கும்
மேற்பட்டோர் வியாழக்கிழமை சத்தி கோவை சந்திப்பில் திரண்டனர்.இவர்கள்
தமிழகஅரசை கண்டித்தும் விவசாயத்தை காப்பாற்ற கோரியும் சாலை மறியலில்
ஈடுபட்டனர். இதன் காரணமாக, சத்தி கோவை சாலையில் போக்குவரத்து
பாதிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து, பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்கள்
மாற்றுபாதையில் அனுப்பப்பட்டன.
அங்கு வந்த சத்தி டிஎஸ்பி முத்து மாணிக்கம்,
வட்டாட்சியர் முத்துராமலிங்கம் ஆகியோர் விவசாயிகளின் கோரிக்கைகளை பேசி
தீர்த்துக்கொள்ளலாம் என கூறினார். ஆனால், மின்துண்டிப்பை கைவிட்டால்
மட்டுமே பேச்சுவார்த்தை என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தியதால்
போராட்டம் நீடித்தது.
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னி, சார்
ஆட்சியர் சந்திரசேகர சாகமுறி ஆகியோர் விவசாய சங்க நிர்வாகிகளிடம் தொலைபேசி
மூலம் பேசியதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. பின்னர்,அனைவரையும் கைது
செய்த போலீஸார் அரியப்பம்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் தங்க
வைத்தனர்.
இந்நிலையில், சத்தி வட்டாட்சியர் அலுவலக்தில்
வருவாய்த்துறையினர் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை
வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. இதில் கோபி சார் ஆட்சியர் சந்திரசேகர
சாகமுறி, சத்தி டிஎஸ்பி முத்து மாணிக்கம், வட்டாட்சியர் முத்து ராமலிங்கம்
மற்றும் விவசாயிகள் சார்பில் எஸ்.பி.வெங்கிடுசாமி, ஏ.என்.சின்னராஜ்,
நடராஜ், எஸ்.ஆர். முத்துச்சாமி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர்
கலந்துகொண்டனர்.
இதில் கோபி சார் ஆட்சியர் சந்திரசேகர சாமுறி
பேசுகையில், நீதிமன்ற உத்தரவுபடி, ஆற்றங்கரையோர மின் இணைப்புகளை அரசு
அலுவலர்கள் துண்டித்து வருகின்றனர். இதில் குறிப்பாக, அனுமதி பெறாத
மின்இணைப்புகளை மட்டுமே துண்டிக்கப்படுகிறது. விவசாயிகளின் தரப்பு
கோரிக்கைகளையும் அரசு அனுப்பி வைக்கிறோம். அதேநேரத்தில், விவசாயிகள்
நீதிமன்றத்திற்கு சென்று இப்பிரச்னைக்கு தீர்வு காணலாம் என்றார்.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட அனைவரும் வியாழக்கிழமை மாலை விடுக்கப்பட்டனர்
0 comments:
Post a Comment