லாரி , அரசு பஸ் மோதல் - திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்துக்கு பாதிப்பு!
சத்தியமங்கலம், திம்பம் மலைப்பாதையில் லாரி & அரசுபேருந்து
மோதி விபத்து ஏற்பட்டதால் தமிழகம் & கர்நாடகா இடையே 3 மணி நேரம்
போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் & பெங்களூரூ தேசிய
நெடுஞ்சாலை எண் 209 ல் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள திம்பம் மலைப்பாதையில்
27 அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. ஒசூருக்கு அடுத்தபடியாக
தமிழகத்தையும் கர்நாடகத்தையும் இணைக்கும் முக்கியமான இச்சாலை வழியாக 24
மணிநேரமும் சரக்கு லாரிகள், தமிழக, கர்நாடக அரசுப்பேருந்துகள்
பயணிக்கின்றன. நேற்று மதியம் 2.30 மணிக்கு கோவையிலிருந்து மைசூருக்கு
சென்று கொண்டிருந்த கர்நாடக அரசுப்பேருந்து மலைப்பாதையில் 7 வது கொண்டை
ஊசி வளைவில் திரும்பியபோது கர்நாடக மாநிலம் மங்களூரிலிருந்து மீன்கருவாடு
பாரம் ஏற்றிய லாரி திருச்சி மீன்மார்க்கெட் கொண்டு செல்வதற்காக
மலைப்பாதையில் கீழே இறங்கும் வழியில் அரசுப்பேருந்தின் பக்கவாட்டில்
மோதியதில் லாரியின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. விபத்து ஏற்பட்டதும் லாரி
டிரைவர் திருவாரூரைச்சேர்ந்த மோகன்(35) லாரியை விட்டு இறங்கி
தப்பியோடினார்.
விபத்தில் பயணிகளுக்கு லேசான காயம் மட்டும் ஏற்பட்டது.
இருப்பினும் கொண்டைஊசி வளையில் விபத்து ஏற்பட்டதால் மற்ற வாகனங்கள்
செல்லமுடியாமல் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. விபத்து
ஏற்பட்டு 1 மணி நேரம் கழித்து நெடுஞ்சாலை ரோந்து போலீசார் வந்ததால் வாகன
ஓட்டிகள் விரக்தியடைந்தனர். பின்னர் மீட்பு வாகனம் மூலம் லாரி
நகர்த்தப்பட்டு மாலை 5.30 மணிக்கு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.
0 comments:
Post a Comment