கிடப்பில் போடப்பட்ட நீர்ப் பாசனத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்: கொ.ம.தே.க பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்
கொ.ம.தே.க பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் |
கிடப்பில்
போடப்பட்ட நீர்ப்பாசனத் திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என
சத்தியில் புதன்கிழமை இரவு நடந்த கொமதே கட்சியின் மாநாடு விளக்க
கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தமிழக அரசை
கேட்டுக்கொண்டார்.
சத்தியமங்கலம் அத்தாணி ரோட்டில் உள்ள தனியார் திருமண
மண்டபத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற மாநாடு விளக்க கூட்டத்திற்கு ஈரோடு
மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.முத்துசாமி தலைமை வகித்தார். சத்தி ஒன்றிய
செயலாளர் எஸ்.பி.நடராஜன் வரவேற்றார். தலைமை நிலைய செயலாளர் சூரியமூர்த்தி,
சென்னை மாவட்ட செயலாளர் இசைபாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேசியது:
எந்த
கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கொங்கு மண்டலம் புறக்கணிக்கப்படுகிறது. கரும்பு
டன்னுக்கு ரூ.3500 வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தோம். தற்போது ரூ.300
அதிகரித்துள்ளதாக அரசு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பசும்பால் லிட்டருக்கு
ரூ.30ம், எருமைப்பால் ரூ.40ம் வழங்க வலியுறுத்தினோம். ஆனால் லிட்டருக்கு
ரூ.3 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. பவானி ஆற்றில் நீர் எடுத்து விவசாயம்
செய்துவரும் விவசாயிகளின் மின்இணைப்பை துண்டிப்பது கண்டனத்திற்குரிய
செயலாகும். தொடர்ந்து இப்பணி நடைபெற்றால் பெரும் போராட்டம் நடத்தப்படும்.
கொங்கு நாட்டின் நீர்ப்பாசன திட்டங்களான அவினாசி-
அத்திக்கடவு திட்டம், பாண்டியாறு- புன்னம்புழா திட்டம், ஆனைமலை-நல்லாறு
திட்டம், திருமணிமுத்தாறு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இத்திட்டங்களை நிறைவேற்று தமிழக அரசை இக்கட்சி வலியுறுத்தும். விவசாய
விளைபொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும். டீசல் பெட்ரோலில்
எத்தனால் கலந்து பயன்படுத்தினால் கரும்பு டன் ஒன்றுக்கு ரு.5000 வழங்க
முடியும்.
பெற்றோர் அனுமதியில்லாமல் பெண்களுக்கு 21 வயது
முடியும் வரை நடைபெறும் திருமணங்களை அரசு அனுமதிக்கக்கூடாது. கோவை,
திருப்பூர், ஈரோடு போன்ற தொழில் நகரங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கி
பவுண்டரி, பனியன் மற்றும் விசைத்தறி உள்ளிட்ட பல்வேறு தொழில்களை காப்பாற்ற
வேண்டும்.விவசாயகடன்கள் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு
முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் வரும் 29 ம் தேதி பெருமாநல்லூரில்
நடைபெறும் அரசியல் எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்படும். குறிப்பாக
கவுண்டர் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தோர் பட்டியலில் சேர்க்க
வேண்டுமென்றால் அனைவரும் குடும்பத்துடன் தவறாது மாநாட்டில் பங்கேற்க
வேண்டும் என்றார். கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment