40 லோக்சபா தொகுதிகளில், அ.தி.மு.க., சார்பில், போட்டியிட விருப்பம் தெரிவித்து, 4,500 பேர் மனு - 11 கோடி ரூபாய்க்கு மேல் வசூல்
அ.தி.மு.க., தலைமை அலுவலகம் |
சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு உட்பட்ட, 40 லோக்சபா தொகுதிகளில், அ.தி.மு.க., சார்பில், போட்டியிட விருப்பம் தெரிவித்து, 4,500 பேர் மனு கொடுத்துள்ளனர். விண்ணப்பப் படிவம் விற்பனை மூலம், 11 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகி உள்ளது. இலக்கை தாண்டி, விண்ணப்பங்கள் விற்பனையானது, அ.தி.மு.க., நிர்வாகிகளிடம், மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி, பிப்ரவரி மாதம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை, தேர்தல் கமிஷன் துவக்கி விட்டது.
முதல்வர் ஜெயலலிதா |
விருப்ப மனு:தமிழகத்தில், ஆளும் கடசியான அ.தி.மு.க., அனைத்து கட்சிகளையும் முந்திக்கொண்டு, கட்சி நிர்வாகிகளிடம், விருப்ப மனு வாங்கும் பணியை, முடித்து விட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு உட்பட்ட, 40 லோக்சபா தொகுதிகளிலும், அ.தி.மு.க., சார்பில், போட்டியிட விரும்புவோரிடமிருந்து, விருப்ப மனு வாங்கும் பணி, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், இம்மாதம், 19ம் தேதி துவங்கியது. தினமும், காலை, 10:00 மணியில் இருந்து, இரவு, 7:00 மணி வரை, மனுக்கள் விற்பனை செய்யப்பட்டன. அதேபோல், பூர்த்தி செய்யப்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.முதல்வர் ஜெயலலிதாவை, பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி, தேர்தலை சந்திக்க, அ.தி.மு.க., முடிவு செய்திருப்பதால், அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் என அனைத்து தரப்பினரும்,முதல்வர் தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும்' என, விருப்ப மனு கொடுத்தனர். அதேபோல், தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தோரும்,முதல்வர் பெயரில் ஒரு மனு கொடுத்தனர். முதல் நாளே, 700க்கும் மேற்பட்டோர் மனு கொடுத்தனர்.
இலக்கு:விண்ணப்ப கட்டணமாக, 25,000 ரூபாய் கொடுப்போருக்கு மட்டும், விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டன. தொகுதிக்கு, 100 விண்ணப்பம் வீதம், 4,000 விண்ணப்பம் விற்பனை செய்ய, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதில், ஆயிரம் பேர், முதல்வர் பெயரில் விண்ணப்பம் கொடுப்பர் என, எதிர்பார்க்கப்பட்டது. நேற்று முன்தினம் வரை, 3,500க்கும் மேற்பட்டோர் மனு கொடுத்திருந்தனர்.விருப்ப மனு கொடுக்க, கடைசி நாளான நேற்று, மாநிலம் முழுவதுமிருந்து, ஏராளமானோர் மனு கொடுக்க, கட்சி அலுவலகத்தில் குவிந்தனர். நீண்ட வரிசையில் நின்று, விண்ணப்பங்களை வாங்கி, பூர்த்தி செய்து கொடுத்தனர். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, அமைச்சர் வளர்மதி வாங்கினார். காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, நேற்று பலர் மனுகொடுத்தனர். மாலை, 5:00 மணிக்கு, விண்ணப்பப் படிவம் விற்பனை, 4,500ஐ தாண்டியது. இதன் மூலம், 11.25 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. இலக்கை தாண்டி, விருப்ப மனு விண்ணப்பங்கள் விற்பனையானது, கட்சி நிர்வாகிகளிடம், பலத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.விண்ணப்பப் படிவம் விற்பனை, இலக்கை தாண்டியதால், விருப்ப மனு கொடுக்கும் தேதி நீட்டிக்கப்படவில்லை. மொத்தம் எத்தனை மனுக்கள் விற்பனையானது? வசூலானத் தொகை எவ்வளவு? முதல்வர் போட்டியிட விருப்பம் தெரிவித்து பெறப்பட்ட மனுக்கள் விவரம், ஆகியவற்றை, முதல்வர் ஜெயலலிதா வெளியிடுவார் என, கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment