சத்தியமங்கலம் அருகே தனியார் பேருந்தை வழிமறித்த காட்டுயானைகள் - பயணிகள் அலறல்
****************************** ****************************** *******************
******************************
சத்தியமங்கலம்
அருகே தலமலை அடர்ந்த வனப்பகுதியில் சென்ற பயணிகள் பேருந்தை காட்டுயானைகள்
வழிமறித்ததால் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள தலமலை
வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. இப்பகுதி புலிகளிடம் புகலிடமாக
உள்ளது. கேரளா, கர்நாடக மற்றும் தமிழக மாநிலங்களுக்கு இடையே இடம் பெயரும்
யானைகளின் முக்கிய வழித்தடமாக தலமலை வனப்பகுதி அமைந்துள்ளது. அடர்ந்த
காட்டுப்பகுதி என்பதால் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே சில அரசு பேருந்து
மற்றும் ஒரு தனியார் மட்டுமே இயக்கப்படுகின்றன.
சத்தியில் இருந்து திம்பம், தலமலை,தாளவாடி வழியாக
சாம்ராஜ்நகருக்கு தனியார் பேருந்து இயக்கப்படுகிறது. இந்த தனியார் பேருந்து
ஞாயிற்றுக்கிழமை திம்பத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தலமலை வழியாக
தாளவாடி சென்றுகொண்டிருந்தது. ராமர்அணை என்ற இடத்தில் ஒற்றை யானை சாலையோர
செடிமறைவில் நின்றுகொண்டிருந்ததை ஓட்டுநர் பார்த்தார்.
அவர் பேருந்தை மெதுவாக ஓட்டி செல்ல முயன்றபோது அது
சாலையை வழிமறித்து நிற்பதும் பின் வனத்துக்குள் செல்வதுமாக போக்கு
காட்டியது. பேருந்தை யானை துரத்துவதும் ஓட்டுநர் பேருந்தை பின்னால்
ஓட்டுவதுமாக சில நிமிடங்கள் நடந்தன. இதனால், 1 மணி நேரமாக சாலையை
கடக்கமுடியாமல் ஓட்டுநர் தவித்தார்.
இதற்கிடையில், பயணிகளை சப்தமின்றி அமைதியாக
இருக்குமாறு அறிவுறுத்தியபடி ஓட்டுநர் பேருந்தை இயக்கினார். அது
மறைந்திருக்கும் இடத்தை நெருங்கும்போது யானை பேருந்தை துரத்தியது. ஓட்டுநர்
சாமர்த்தியமாக பேருந்தை வேகமாக இயக்கி யானையின் தாக்குதலில் இருந்து
தப்பித்தார்.
சற்றுதூரத்திற்கு அப்பால் பேருந்தை நிறுத்தி
பார்த்தபோது, 11 யானைகள் கொண்ட ஒரு யானை கூட்டம் குட்டிகளுடன் சாலையை
கடப்பது தெரியவந்தது. இதை பார்த்த பயணிகளுக்கு உற்சாகம் ஏற்பட்டு தங்களது
செல்போனில் யானைகளை ஆர்வத்துடன் படம் பிடித்தனர்.
இது குறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது, யானை
கூட்டத்தை தாய் யானை வழி நடத்துவது இயல்பான ஒன்று. அவை ஓரிடத்தில் இருந்து
மற்றொரு இடத்திற்கு செல்லும்போது தாய்யானை அதற்கு முன்பாகவே சென்று அதன்
வழித்தடத்தை உளவு பார்க்கும். அவை செல்லும் வழித்தடம் பாதுகாப்பாக உள்ளது
என்றால் மட்டுமே அது கூட்டத்திற்கு சமிக்கை மொழியில் தகவல் அனுப்பும்.
அதன்பிறகே,யானைக்கூட்டம் அப்பகுதியை கடக்கும். இவ்வாறு தான் தாய்யானை தனது
கூட்டத்தை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல இம்மாதிரி நடந்துகொண்டது என்றார். .
0 comments:
Post a Comment