சத்தி-மைசூர் நெடுஞ்சாலையி்ல் நடமாடும் காட்டுயானைகள்: வாகன ஓட்டிகள் அச்சம்
சத்தியமங்கலம்-மைசூர்
நெடுஞ்சாலையில் சாலையோர மரங்களில் துளிர்விடும் இலைகளை தின்பதற்காக
காட்டுயானைகள் அப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் செல்வதில்
சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகள், புலிகள்,
சிறுத்தை, கரடிகள், கழுத்தைப்புலி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இதில்
யானைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதால் இப்பகுதியில் யானைகளின்
நடமாட்டத்தை எளிதாக காணலாம்.
நடப்பாண்டு பருவமழை பொய்த்துவிட்டதால், அடர்ந்த
காட்டுப்பகுதியான திம்பம், தலமலை போன்ற வனங்களில் உள்ள மரங்களின் இலைகள்
காய்ந்து சருகாகிபோயின. காட்டுயானைகள், மான்கள், காட்டெருமைகள் போன்ற
விலங்குகள் பசுந்தீவனம் தேடி வனத்தையொட்டியுள்ள கிராமங்களில் படையெடுத்து
அங்கு சாகுபடி செய்யப்பட்ட விவசாயப்பயிர்களை தின்றும் மிதித்தும்
சேதப்படுத்துகின்றன.
இந்நிலையில், சில வாரங்களுக்கு முன் பெய்த தொடர் சாரல்
மழையால் காய்ந்துபோன மரங்களில் தற்போது இலைகள் துளிர்விட்டு தழைக்க
ஆரம்பித்துள்ளன. சாலையோர மரங்கள் பச்சை பசேலென காணப்படுகின்றன. மூங்கில்
மரங்களும் நன்கு செழித்து வளர ஆரம்பித்து்ள்ளதால் சத்தி மைசூர் சாலையில்
இதமாக காலநிலை நிலவுகிறது. சில்லென குளிர்ந்த காற்றும் வீசுகிறது. இதனால்,
காட்டுக்குள் நடமாடிய காட்டுயானைகள் திம்பம், ஹாசனூர் சாலையில் சாதாரணமாக
திரிகின்றன.
சாலையோர மரங்களில் துளிர்விடும் இலைகளை தின்று அதே
இடத்தில் முகாமிடுவதால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு தற்போது
சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதற்கிடையில், தாளவாடியைச் சேர்ந்த இளைஞர் பைக்கில்
செவ்வாய்க்கிழமை மைசூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது யானைகள் கூட்டம்
கூட்டமாக சாலை கடந்து சென்றன. இதைப் பார்த்த அந்த இளைஞர் திடீரென பைக்
பிரேக்கை அழுத்தியதால் ரோட்டில் விழுந்தார். பின்னால் வந்த வாகன ஓட்டிகள்
அவரை பத்திரமாக மீட்டனர். அப்போது, அந்த கூட்டத்தில் குட்டியுடன் சென்ற
தாய்யானை மட்டும் சாலையோர மரக்கிளையில் பசுந்தழைகளை தின்றபடி அங்கேயே
நின்றது.
குட்டியானை சாலையில் இருபுறமும் செல்வதும் வருவதுமாக
விளையாடிதால் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் மேலும் சிக்கல் நீடித்து நீண்ட
நேரம் காத்திருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த அரசு பேருந்தின் இரைச்சல்
யானைகளுக்கு சற்று எரிச்சலாக இருந்ததால் அவை காட்டுக்குள் செல்ல துவங்கின.
அதைத் தொடர்ந்து, சிறு வாகனங்கள், வாகன ஓட்டிகள் நிம்மதியுடன் சென்றனர்.
மைசூர் நெடுஞ்சாலையில் யானைகள் முகாமிட்டுள்ளதால் அவை அவ்வவ்போது சாலையை
கடக்கும் என்பதால் பொதுமக்கள் மெதுவாக செல்லுமாறு வனத்துறையினர்
அறிவுறுத்தியுள்ளனர்.
0 comments:
Post a Comment