சத்தி நகராட்சியில் பிளாஸ்டிக் பை பயன்பாடு ஒழிப்பு
சத்தியமங்கலம்
நகராட்சியில் பிளாஸ்டிக் பை பயன்பாடு முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாக
நகராட்சி ஆணையாளர் கே.சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
சத்தியமங்கலம் முதல்நிலை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. 2011ம்
ஆண்டு கணக்கெடுப்புபடி நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 37805 பேர்.
நகராட்சியின் அருகில் பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோயில் உள்ளதால்
பக்தர்கள் அதிக அளவில் நகராட்சிப் பகுதியில் வந்து செல்கின்றனர். இதனால்
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகள் மற்றும் கப்புகள்
உபயோகத்தில் இருந்து வந்தன. இதனை முற்றிலும் ஒழிக்க தீவிர நடவடிக்கை
மேற்கொண்டு, முதலில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டாம்
டாம் மூலம் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, துண்டு பிரசுரம்
விநியோகிக்கப்பட்டது.
இதை தவிர, வியாபார நிறுவன உரிமையாளர்களை அழைத்து
விழிப்புணர்வு கூட்டமும் நடத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து,ஆணையாளர்
கே.சரவணக்குமார் மற்றும் சுகாதார அலுவலர் கே.சக்திவேல் தலைமையில் நகர்
முழுவதும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டதில் மொத்த விற்பனையாளரிடமிருந்து
300 கிலோ பிளாஸ்டிக் கேரி பேக்ஸ் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.31 ஆயிரத்து
550 அபராதம் விதிக்கப்பட்டது.
சந்தை, இறைச்சிக்கூடங்கள், பூக்கடைகள், தினசரி சந்தை,
இரவு நேர தள்ளுவண்டி கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அபராதம்
விதிக்கப்பட்டு பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. டீ
கடை , டாஸ்மாக் பார்களில் பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்துவதும்
விநியோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. நகராட்சியின் தொடர் நடவடிக்கையால்
பிளாஸ்டிக் பைகள் உபயோகிப்பதை முற்றிலுமாக தவிர்த்து துணிப்பைகளே
உபயோகிக்கப்படுகிறது.இதனால் தற்பொழுது குப்பை இல்லாத சிறந்த தூய்மையான
நகரமாக விளங்குகிறது என்றார்.
0 comments:
Post a Comment