பக்தர்கள் அலகு குத்தி வழிபாடு
புன்செய்
புளியம்பட்டி அருள்மிகு அன்னை காமாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவை
முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், பூவோடு மற்றும் அலகு குத்தி தேர் இழுத்து
அம்மனை வழிபட்டனர்.
புன்செய் புளியம்பட்டி சேரன் வீதியில்
அமைந்துள்ளது அன்னை காமாட்சி அம்மன் கோவில். இக்கோவிலில் ஆண்டு தோறும்
சித்திரை மாதம் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு
திருவிழா கடந்த 29 ஆம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
தொடர்ந்து காப்பு கட்டுதல் மே 6 ஆம் தேதி சின்ன கிணற்றில் இருந்து பஞ்ச
வாத்தியங்களுடன் அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து 7
ஆம் தேதி அம்மை கோவில் வந்தடைந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர்
மகளீர் அணி சார்பில் அம்மனுக்கு திருகல்யாணம் நடைபெற்றது. விழாவின் முக்கிய
நிகழ்ச்சியான அலகு குத்துதல், தேர் இழுத்தல் நிகழ்ச்சி சின்ன கிணற்றில்
இருந்து பம்பை பஞ்ச வாத்தியங்களுடன் துவங்கியது. இதையொட்டி ப்ளாக்
மாரியம்மன் கோவில் திடலில் தேர்கள் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள்
செய்யப்பட்டன. தொடர்ந்து அலகு குத்தும் பக்தர்கள் வேல்களை குத்தியும்,
தேர்களை இழுத்தும் வந்தனர். இந்த ஊர்வலம் ப்ளாக் மாரியம்மன் கோவிலில்
துவங்கி நம்பியூர் ரோடு, கோவை மெயின் ரோடு, மாதம்பாளையம் ரோடு, சேரன் வீதி
வழியாக கோவிலை வந்தடைந்தது. முன்னதாக சிறுவர் சிறுமியர்கள் பால்குடம்
மற்றும் தீர்த்த குடம் எடுத்தும், பெண்கள் பூவோடு ஏந்தியும் அம்மா காமாட்சி
தாயே என்ற பக்தி கோசங்களை எழுப்பியும் நேர்த்தி கடனை நிறைவேற்றினர்.
இரவு அம்மனுக்கு அபிசேக பூஜையும், அலங்கார பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து 8 ஆம் தேதி மாவிளக்கு ஊர்வலமும், முளைப்பாரி ஊர்வலமும் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. விழாவையொட்டி இன்னிசை நிகழ்ச்சி, பக்தி பாடல்கள் நிகழ்ச்சி, பள்ளி குழந்தைகளின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. 9 ஆம் தேதி குத்துவிளக்கு பூஜையுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை காமாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment