தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, May 10, 2014

சத்தியமங்கலம் மாயாற்றிலிருந்து 2 யானைகளும் பத்திரமாக மீட்பு

 




சத்தியமங்கலம் மாயாற்றுப் படுகையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பெண் யானையை மீட்க முயன்ற மற்றொரு யானையும் சேற்றில் சிக்கிக் கொண்டது. வனத்துறையினர் தீவிரமாக செயல்பட்டு இரு யானைகளையும் பத்திரமாக மீட்டனர்.

பூதிக்குப்பம் காப்புக்காடு தென்பாறை மாயாற்றுப் படுகையில் உயிருக்குப் போராடிய 12 வயதுள்ள பெண் யானையை மீட்கும் பணியில் வனத்துறையினர் கடந்த இரு தினங்களாக ஈடுபட்டு வந்தனர். கால்நடை மருத்துவர்கள் பிரதீப், தமிழரசி ஆகியோர் யானைக்கு குளுகோஸ் செலுத்தி சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை மாயாற்றுப் படுகைக்கு வந்த சில யானைகள், உயிருக்குப் போராடிய பெண் யானை அருகே வந்தன. படுத்துக் கிடந்த யானையை தும்பிக்கையால் தூக்கி காப்பாற்றும் முயற்சியில் அவை ஈடுபட்டன. அப்போது, அதில் இருந்த 10 வயதுள்ள பெண் யானை திடீரென அதே இடத்தில் மயங்கி விழுந்தது. அப்போது, அதன் பின்னங்கால் சேற்றில் சிக்கிக்கொண்டது. இரு யானைகளையும் காப்பாற்றும் முயற்சியில் பிற யானைகள் ஈடுபட்டன. இருப்பினும், மிகவும் பலவீனமாக கிடந்த யானைகளை மீட்க முடியாததால் அவை மீண்டும் காட்டுக்குள் சென்றன.
இதையடுத்து, மாயாற்றுப் படுகையில் 100 அடி தூரத்தில் அடுத்தடுத்து சேற்றில் சிக்கிக் கிடந்த பெண் யானைகளை மீட்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். அவற்றை கரைக்கு கொண்டு வரும் முயற்சியில் அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 

மிகுந்த சோர்வுடன் காணப்பட்ட யானைகளின் கால்களை கயிறு மூலம் கட்டி பொக்லைன் மூலம் தூக்கி மெல்ல மெல்ல கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். யானைகள் கரைக்கு கொண்டுவரப்பட்டதும் அவற்றின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது. கால்நடை மருத்துவர்கள், திரவ உணவுகளை யானைகளின் காது வழியாக செலுத்தி வருகின்றனர்.
அதிகாரி கருத்து: பவானிசாகர் வனத்தில் உள்ள குளம், குட்டைகள் வறண்டு காணப்படுவதால் யானைகளுக்கு போதிய தீவனம் மற்றும் குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் அவை குடிநீர் தேடி பவானிசாகர் நீர்த்தேக்கப்பகுதிக்கு படையெடுக்கின்றன. மாயாற்றுப் படுகையை ஒட்டியுள்ள பகுதிகளில் சேறும் சகதியும் நிறைந்திருப்பதால் நோய்வாய்ப்பட்டுள்ள யானைகள் சேற்றில் சிக்கிக்கொள்கின்றன. கோடைகாலத்தில் யானைகள் நோய்த் தாக்குதலுக்கு உள்ளாவதால் அதன் உடல்நிலை பலவீனம் அடைந்து மோசமான நிலைக்கு தள்ளப்படுகின்றன என வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment