பர்கூர் மலைப்பகுதியில் காட்டாற்று வெள்ளத்தால் 15 கிராமங்கள் துண்டிப்பு - மணியாச்சியில் உயர்மட்டப் பாலம் கட்டும் பணி பாதிப்பு
பவானியை அடுத்த அந்தியூர் பர்கூர் மலைப்பகுதியில்
புதன்கிழமை பிற்பகலில் பரவலாக பெய்த கனமழையால் மணியாச்சி பள்ளத்தில் திடீர்
காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், 13 கிராமங்கள்
துண்டிக்கப்பட்டுள்ளதோடு, உயர்மட்டப் பாலம் கட்டும் பணியிலும் தொய்வு
ஏற்பட்டுள்ளது.
பர்கூர் மலைப் பகுதியில் தாமரைக்கரையையும், மேற்குமலை
பகுதியில் 15 கிராமங்களையும் பிரிக்கும் மணியாச்சி பள்ளத்தில் ரூ.2.89 கோடி
மதிப்பில் உயர்மட்டப் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த
11-ம் தேதி பர்கூர் மற்றும் சுற்றுப்புற மலைகளின் பல்வேறு பகுதியில் பெய்த
கனமழையால் திடீர் வெள்ளம் பெருக்கெடுத்தது.
சுமார் 6 அடி உயரத்துக்கு பெருக்கெடுத்த வெள்ளத்தால்
மணியாச்சியில் பாலம் கட்ட வைக்கப்பட்டிருந்த கட்டுமானப் பொருள்கள்
தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதோடு மண் மூடியதால் சேதமடைந்தது.
இதையடுத்து, கடந்த சில நாள்களாக மீண்டும் கட்டுமானப் பணி தொடங்கி நடைபெற்று
வந்தது.
இந்நிலையில், புதன்கிழமை பெய்த கனமழையால் காட்டாற்று
வெள்ளம் மீண்டும் பெருக்கெடுத்தது. முன்னதாகவே, லேசான தூரலைக் கண்டதும்
வெள்ளம் வரலாம் என அச்சமடைந்த தொழிலாளர்கள் பணியில் ஈடுபடாமல் பாதுகாப்பான
பகுதிக்குச் சென்று ஒதுங்கி நின்றிருந்தனர்.
சற்று நேரத்தில் மலைப்பகுதியில் எதிர்பார்த்த அளவையும்
தாண்டி சீறிவந்த வெள்ளத்தின் வேகத்தைக் கண்டு தொழிலாளர்கள் சிதறி ஓடினர்.
கட்டுமானப் பொருள்களும் அடித்துச் செல்லப்பட்டது. கடந்த இரு வாரங்களில்
மலைப் பகுதியில் பெய்த கனமழையால் இருமுறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், பாலத்தின் கட்டுமானப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்த வெள்ளப் பெருக்கால் பர்கூர் மலைப்
பகுதியில் தாமரைக்கரையிலிருந்து மேற்குமலை பகுதியிலுள்ள 15 கிராமங்களும்
துண்டிக்கப்பட்டுள்ளது. மீண்டும் வெள்ளத்தின் வரத்து குறைந்த பின்னரே
தண்ணீருக்கு மத்தியில் பொதுமக்கள் நடந்து செல்ல இயலும்.
0 comments:
Post a Comment