திம்பம் மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை உலா - பீதியில் பயணிகள்
சத்தியமங்கலம், ஜூன் 17:
திம்பம்
மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை தென்பட்டுள்ளதால் இரு சக்கர வாகன
ஓட்டிகளுக்கு மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை போலீஸார் தடைவிதித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த
திம்பம் 27வது மலைப்பாதையில் சிதறிக்கிடந்த இரும்பு தகடுகளை சேகரிப்பதற்காக
தாளவாடியைச் சேர்ந்த முகமது இலியாஸ்(25) என்பவர் புதர்மறைவில் சென்றுபோது
அங்கு பதுங்கியிருந்த சிறுத்தையால் கொல்லப்பட்டார். இந்த துயரச் சம்பவம்
ஜூன் 11ம் தேதி நடந்துள்ளது.
இதையடுத்து, பண்ணாரி சோதனைச்சாவடியில் பாதுகாப்பு
பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார் மற்றும் வனத்துறையினர், வாகன ஓட்டிகளிடம்
மலைப்பாதையில் பயணிக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுமாறு
அறிவுறுத்தினர். இதனால், திம்பம் மலைப்பாதையில் செல்வோர் அச்சத்துடன்
பயணிக்கின்றனர்.
துப்பாக்கி ஏந்திய வனத்துறையினர் திம்பம் அடிவாரத்தில்
சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையே,
தாளவாடியில் இருந்து சத்தி டிஎஸ்பி அலுவலகம் நோக்கி ஜீப்பில் சென்று
கொண்டிருந்த தாளவாடி காவல் ஆய்வாளர் பழனியப்பன். திங்கள்கிழமை மாலை 6
மணிக்கு திம்பம் வந்துள்ளார். ஜீப்பை காவலர் கண்ணன் ஓட்டினார். அப்போது,
திம்பம் மலைப்பாதை 27வது வளைவில் ஜீப் திரும்பும்போது மரக்கிளையில்
சிறுத்தை பதுங்கியிருப்பதை பார்த்து இருவரும் அதிர்ச்சியில் உறைந்து
போனார்கள். மனிதர்களை கொன்று பழகிய சிறுத்தை மீண்டும் அப்பகுதிக்கு வரும்
என்பதை தெரிந்து கொண்ட போலீஸார் செய்வதறியாது நின்றனர்.
அப்போது எதிரே தொடர்ந்து வந்துகொண்டிருந்த லாரிகளை பார்த்ததும் சிறுத்தை தாவி குதித்து காட்டுக்குள் சென்றுவிட்டது.
சிறுத்தை
நேரில் பார்த்த காவல் ஆய்வாளர் பழனியப்பன், அருகில் உள்ள ஆசனூர்
காவல்நிலையம் மற்றும் பண்ணாரி சோதனைச்சாவடிக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, பண்ணாரி சோதனையில் வாகனங்களை தடுத்து நிறுத்தி சிறுத்தை
நடமாட்டம் குறித்து உஷார் படுத்தினர். திறந்த நிலையில் உள்ள
சரக்குவாகனங்களில் எவரும் பயணிக்ககூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
பைக்கில் செல்லும் வாகனஓட்டிகளுக்கு அனுமதி
மறுக்கப்பட்டது. பைக்குகளை சோதனைசாவடியில் நிறுத்திவிட்டு பேருந்து
மற்றும் வாகனங்களில் அவர்களை ஏற்றி போலீஸார் அனுப்பி வைத்தனர்.
பகல்நேரத்தில் மட்டுமே இருசக்கர வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பு பலகைகளையும் சோதனைச்சாவடியில் போலீஸார் வைத்துள்ளனர்.
சிறுத்தை மீண்டும் தென்பட்டதால் காளிதிம்பம், ராமரணை மற்றும் தலமலை
மலைவாழ்மக்கள் 10 பேர் கொண்ட குழுவாக நடந்து செல்கின்றனர்.
0 comments:
Post a Comment