பவானிசாகர் கீழ்பவானி வாய்க்காலில் கொப்புவாய்க்கால் மதகு கட்டும் பணி தீவிரம்
பவானிசாகர் கீழ்பவானி வாய்க்காலில் ரூ.9.75 இலட்சம் செலவில் புதிய கொப்பு வாய்க்கால் மதகு கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. |
சத்தியமங்கலம், ஜூன்.17. பவானிசாகர் கீழ்பவானி வாய்க்காலில் கொப்புவாய்க்கால் மதகு கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கருர் மாவட்டங்களில் மொத்தம் 2 இலட்சத்து 14 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மெயின் வாய்க்காலிலிருந்து கிளை வாய்க்கால்களுக்கு மதகுகள் மூலம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதில் ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை மதகுகள் உள்ளன. கொப்பு வாய்க்காலுக்கு திறக்கப்படும் மதகுகள் கட்டப்பட்டு 60 ஆண்டுகள் ஆகிவிட்டதினால் காரைகள் பெயர்ந்து சிதிலமடைந்த நிலையில் உள்ளன. பழுது ஏற்பட்டுள்ள மதகுகளுக்கு பதிலாக புதியதாக கொப்புவாய்க்கால் கட்டும்பணி கீழ்பவானி வாய்க்காலின் முதல் கொப்பு வாய்க்காலான மேட்டுப்பாளையம் சாலை வாய்க்கால்பாலம் அருகே நடைபெற்று வருகிறது. இக்கிளை வாய்க்காலில் ஆண்டு முழுவதும் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இதில் திறந்து விடப்படும் தண்ணீர் தமிழ்நாடு வேளாண்பல்கலைக்கழகத் தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு வேளாண்மை ஆராய்ச்சிநிலைய பண்ணைக்கும், மாநில எண்ணெய்வித்து பண்ணைக்கும், மண்டல ஊரக வளர்ச்சி நிறுவனத்திற்கு சொந்தமான பண்ணைக்கும் என மொத்தம் 500 க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. சிறப்பு பழுது பார்த்தல் திட்டத்தின் கீழ் ரூ.9.75 இலட்சம் செலவில் புதிய கொப்பு வாய்க்கால் மதகு கட்டும் பணி நடைபெறுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment