கடும் விலை வீழ்ச்சி: மல்லிகை கிலோ ரூ.40 ஆக சரிவு
விவசாயிகள் கவலை
சத்தியமங்கலம், மே:3
சத்தியமங்கலத்தில் மல்லிகை
உற்பத்தி பன்மடங்காக பெருகியுள்ளதால் அதன் விலை கிலோ ரூ.40 ஆக
சரிந்துவிட்டது.கடும் விலை வீழ்ச்சி காரணமாக பூ விவசாயிகள் கவலை
அடைந்துள்ளனர்.
சத்தியமங்கலம் அடுத்துள்ள சிக்கரசம்பாளையம்,
புதுகுய்யனூர், வடவள்ளி, பவானிசாகர்,தாண்டாம்பாளையம், கெஞ்சனூர் உள்ளிட்ட
100க்கும் மேற்பட்ட கிராமங்களில் 50 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மல்லி,
முல்லைப்பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இப்பகுதியில் தினமும் 15 டன்
மல்லிகை வரத்து வந்துள்ளதால் பூக்களை வாங்க எவரும் முன்வராததால் பூ
மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது. வியாபாரிகளிடையே போட்டி இல்லாத
காரணத்தால் மல்லி விலை மள மள வென சரிந்து கிலோ ரூ.40க்கு விற்கப்பட்டது.
கோடை காலத்தில் பூக்களின் உற்பத்தி
அதிகமாகவே இருக்கும். கடந்த சில நாள்களாக இப்பகுதியில் மழை பெய்துள்ளதால்
வறட்சியில் காயந்துபோன செடிகள் மீண்டும் தழைத்து மொட்டு விட்டதால்
பூக்களின் உற்பத்தி அபரிதமாக உயர்ந்தது. இங்கு விளையும் பூக்கள் ஆந்திரா,
கேரளா மற்றும் கர்நாடகத்தில் மைசூரு,பெங்களூரு போன்ற நகரங்களுக்கு
அனுப்பப்படும். தற்போது, சேலம், திம்மாபுரம், பனைபரத்துப்பட்டி ஆகிய
இடங்களிலும் பூக்கள் வரத்து அதிகமானதால் அவை மைசூர், பெங்களூரு போன்ற
மார்க்கெட்டில் சத்தி பூக்களுக்கு போட்டியாக இருந்தது. இதனால், சத்தி
பூக்கள் கர்நாடகத்துக்கு அனுப்புவது நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, உற்பத்தியான பூக்கள் நிலக்கோட்டை,
மருதூர், வீரபாண்டி, மேட்டுப்பாளையம் ஆகிய இடத்தில் செயல்படும் செண்டு
தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.தேவையை விட வரத்து அதிகமானதால் செண்டு
தொழிற்சாலைகளும் இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி
மல்லியை கிலோ ரூ.90ல் இரு்நது ரூ40 ஆக குறைத்து கொள்முதல் செய்தது.
தோட்டத்தில் ஒரு கிலோ பூக்களை பறிக்க ரூ.45 வரை செலவாகிறது. ஆனால்
உற்பத்தி விலை கூட கிடைக்காமல் தவிக்கின்றனர் பூ விவசாயிகள்.
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில்
செவ்வாய்க்கிழமை விற்கப்பட்ட பூக்களின் விலை விபரம்:(விலை கிலோவில்) மல்லி
ரூ.40, முல்லை ரூ.35,கனகாம்பரம் ரூ.120, செண்டுமல்லி ரூ.40, பட்டுப்பூ
ரூ.60 மற்றும் சம்பங்கி ரூ.35
இது குறித்து தமிழ்நாடு மலர்கள்
உற்பத்தியாளர் தலைமைச் சங்கத்தின் தலைவர் எஸ்.ஆர்.முத்துச்சாமி, செயலாளர்
கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் செவ்வாய்க்கிழமை கூறியது: பூக்களின் உற்பத்தி
அதிகமானதால் அதன் விலையும் கிலோ ரூ.40 ஆக சரிந்துவிட்டது.(அதாவது ஒரு படி
மல்லி ரூ.10க்கு விற்கப்பட்டது)
ஒரு கிலோ பூக்கள் உற்பத்தி செய்ய ரூ.45 வரை
செலவாகிறது. வெளிமார்க்கெட்டில் பூக்களுக்கு விலை கிடைக்காததால்
இப்பகுதியில் விளையும் பூக்களை வாசனை திரவம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு
அனுப்பி வைக்கிறோம். இதனால் சங்கத்திற்கு தினந்தோறும் ரூ.1 லட்சம் வரை
நஷ்டம் ஏற்படுகிறது. இதே நிலை நீடித்தால் 6 மாதங்களில் பூ விவசாயம் கேள்வி
குறியாகும். விலை சரிவால் பூ விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர் என்றார்.
0 comments:
Post a Comment