சத்தியமங்கலம் நடுமலை மாதேஸ்வரன் கோயிலில் மாட்டுப்பொங்கல் விழா
புளியம்கோம்பை நடுமலை மதேஸ்வரர் கோவில் விழாவில் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஸ்ரீ நந்தீஸ்வரர். |
மாட்டுப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடுமலை மாதேஸ்வரன் கோயிலில்
புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாடு பூஜையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
சத்தியமங்கலம்
மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது.
தமிழ்ரகளின் உணர்வோடு இரண்டறக் கலந்துவிட்ட பொங்கல் பண்டிகையை கிராமமக்கள்
கோலாகலமாக கொண்டாடினர். பொங்கலுக்கு சில தினங்களுக்கு முன்பிருந்தே மக்கள்
வீட்டுக்கு வெள்ளையடித்து வர்ணம் பூசி அழகுபடுத்தினர். மார்கழி கடைசிநாளான
திங்கள்கிழமை சங்கராந்தி விழா கொண்டாடும் விதமாக பெண்கள் விரதம் இருந்து
வீடுகளுக்கு வேப்பிலை,ஆவாரம்பூ மற்றும் பூலப்பூவை ஒன்றாக சேர்த்து வீட்டு
முகப்பில் காப்புகட்டி விழாவை வரவேற்றனர்.இதேபோல வணிக நிறுவனங்கள்,கடைகள்
மற்றும் வாகனங்களில் பொங்கல் பூக்கள் கட்டப்பட்டன.
மண்உருவ மாட்டுப் பொம்மைகள் |
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தைப்பொங்கல் விழாவில் பெண்கள்
சூரியனுக்கு பொங்கலிட்டு வழிபட்டனர். ஆண்டு முழுவதும் உழைக்கும் மாடுகளை
தெய்வமாக கருதி வழிபடும் மாட்டுப் பொங்கல்கிராமப்புறங்களில் புதன்கிழமை
உற்சாகமாக கொண்டாடப் பட்டது. சத்தியமங்கலம் சுற்றுப்புறப் பகுதியில் உள்ள
விவசாயிகள் தொழுவத்தில் கட்டியிருந்த மாடுகளை குளிப்பாட்டி, அவற்றின்
கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி கழுத்தில் மணிகள்,பாசிகள் சேர்க்கப்பட்ட
அலங்கார கயிறுகள் கட்டி அழகுபடுத்தினர். மேலும் மாடுகளுக்கு புதியதாக
மூக்கணாங்கயிறு, தாம்பு கயிறு அணிவித்து பழங்களை கொண்டு மாடுகளுக்கு
பொங்கல் படைத்து சிறப்பு பூஜைகள் செய்து வணங்கினர்.
சத்தியமங்கலம் புளியம்கோம்பையில் உள்ள நடுமலை
மாதேஸ்வரன் கோயிலில் நந்தீஸ்வரன், நந்தி சிலைகளுக்கு அலங்காரம்
செய்யப்பட்டு புதன்கிழமை அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. கால்நடைகள் நோயின்றி
நீண்ட நாள் வாழவும் விவசாயம் செழிக்கவும் மண் உருவபொம்பைகளை காணிக்கையாக
செலுத்தி வழிபடுவது வழக்கம். அதன்படி விவசாயிகள் மாடுகள், காவல் நாய்
போன்ற மண் உருவ பொம்மைகளை நேர்த்திக்கடனாக செலுத்தி வழிபட்டனர்.
ஆண்டுக்கொருமுறை மாட்டுப்பொங்கல் நாளில் மட்டுமே இக் கோயிலில் வழிபாடுகள்
நடைபெறும் என்பதால் புதன்கிழமை ஏராளமான விவசாயிகள் இதில் கலந்துகொண்டனர்.
சத்தியமங்கலம் கொமராபாளையம் தவளகிரி முருகன் கோயிலில்
புதன்கிழமை மாலையில் நடந்த பூப்பறிப்பு விழாவில் ஏராளமானோர்
கலந்துகொண்டனர். சத்தியில் இருந்து பொதுமக்கள் நடைபயணமாக முருகன்கோயிலுக்கு
சென்று வழிபட்டனர். அங்கு ஒருவருக்கொருவர் இனிப்புகள் மற்றும் இதர
தின்பண்டங்களை வழங்கி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துக்கொண்டனர்
0 comments:
Post a Comment