விலகாத பனிப்பொழிவு: வாட்டும் கடுங்குளிரால் இயல்புவாழ்க்கை பாதிப்பு
கடம்பூர் மலைப்பகுதியில் காலை 8 மணி பனிப்பொழிவு நீடிப்பதால் வெள்ளைகம்பளம் போர்த்தியபோல காணப்படும் கடம்பூர் மலைமுகடுகள் |
தமிழகத்தில் தைமாத
இறுதியில் குளிர்காலம் விலகும் என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக சத்தி
பகுதியில் தொடர்ந்து பனிப்பொழிவு நிலவுகிறது.இதனால் பொதுமக்கள் இயல்பு
வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
சத்தியமங்கலம் பகுதியில் பகலில் வெயிலும் இரவில்
குளிரும் நிலவுகிறது. மாலை 6 மணிக்கு பனிப்பொழிவு தொடங்கி மறுநாள் காலை 8
மணிவரை நீடிப்பதால் கடுங்குளில் மக்கள் அவதிப்படுகின்றனர். காலைநேரத்தில்
வானில் கம்பளியை போர்த்தியது போல ஒரே இருட்டாக காணப்படுகிறது.
அதிகாலை நேரம் பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால்
நடைபயிற்சி செல்பவர்கள் கடந்த 2 நாள்களாக தவிர்த்து வருகின்றனர். சனி
மற்றும் ஞாயிற்றுக்கிழமை முகூர்த்த நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்கள்
குழந்தைகளுக்கு பனிக்குல்லா மற்றும் ஸ்வெட்டர் அணிவித்து அழைத்து
செல்கின்றனர்.
மேகமூட்டமும் பனிப்பொழிவும் காலை 8 மணிவரை நீடிப்பதால்
சாலைகளில் எதிரேவரும் வாகனங்கள் தெளிவாக தெரியாமல் வாகனஓட்டிகள்
சிரமப்படுகின்றனர். லாரி டிரைவர்கள் பிரகாசமான விளக்கை எரியவிட்டாலும்
சிறிது தூரத்துக்குத்தான் அந்த வெளிச்சம் தெரிகிறது. இதனால் வாகனங்கள்
திம்பம் மலைப்பாதையில் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. கடந்த 2010ம் ஆண்டு
பிறகு இப்போது தான் குளிர்காலம் நீடித்துள்ளதாக மாநில வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.
திம்பம் மலைப்பகுதியில் உள்ள மக்கள் குளிரால் சளி,
தொண்டைவலி நோய் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். சத்தியமங்கலம் மற்றும் அதன்
சுற்றுப்புறங்களில் விவசாயமே முக்கியத் தொழிலாக இருப்பதால் மாலை நேரங்களில்
நிலவும் கடுங்குளிரால் தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல்
தவிக்கின்றனர்.
சத்தியில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ள திம்பம்,
ஹாசனூர் மற்றும் தலமலைப்பகுதிகள் கடல் மட்டத்திற்கு மேல் 1105 மீட்டர்
உயரத்தில் அமைந்துள்ளன. ஆண்டுதோறும் தை மாத இறுதியில் கோடைகாலம்
துவங்குவதற்கு மாறாக இப்போது பனிப்பொழிவு நீடித்து வருகிறது.
மலைப்பகுதியில் கடுங்குளிர் நிலவுவதால் வெயில் வரும் நேரத்தைப் பார்த்தவாறு
மலைவாழ்மக்கள் போர்வையை போர்த்தியபடி உள்ளனர். சில கிராமங்களில் குளிரை
சமாளிக்க தீமூட்டி உடலுக்கு சூடு ஏற்றுகின்றனர். கடுமையான பனிப்பொழிவு
மற்றும் பனிமூட்டம் காரணமாக மலைவாழ்மக்களின் இயல்புவாழ்க்கை
பாதிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment