கம்யூனிசம் வீழ்ந்து விடவில்லை. அது உலகெங்கும்
பரவிக் கிடக்கிறது என எழுத்தாளரும் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர்கள்
சங்கத் தலைவருமான பொன்னீலன் தெரிவித்தார்.
ஸ்சிவகங்கையைச் சேர்ந்த பேராசிரியர் நா.தர்மராஜன் எழுதிய மொழிபெயர்ப்பு
நூல்கள் பற்றிய விமர்சனத் தொகுப்பு நூல், மொழிபெயர்ப்புச் செம்மல்
நா.தர்மராஜன்-80. இந்த நூல் வெளியீட்டு விழா மதுரை காந்தி நினைவு
அருங்காட்சிய நூலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில்
எழுத்தாளர் பொன்னீலன் நூலை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியது:
பாரதியின் கனவை நனவாக்கும் விதத்தில் நா.தர்மராஜன் 101 நூல்களை
மொழிபெயர்த்துள்ளார். வெளிநாட்டு இலக்கியங்களை மொழிபெயர்க்கும்போது அந்
நாட்டின் சித்தாந்தம், அதன் உள் அர்த்தம் என்ன என்பது நமக்குப் புலப்படும்.
அன்னகரீனா நூல் ரஷியாவின் மனசாட்சியாக வெளிவந்தது. அந்த நூலை சிறப்பாக
மொழிபெயர்த்துள்ளார்.
ரஷியாவின் ஆன்மா வலுவானது. உலகின் முன்மாதிரி ஆட்சிக் கட்டமைப்பை
உருவாக்கியவர்கள் அவர்கள். அவர்கள் வீழ்ந்துவிட்டதாக நினைக்கிறோம்.
கம்யூனிசம் வீழ்ந்து விடவில்லை. அது உலகெங்கும் பரவிக் கிடக்கிறது.
மார்க்சியத் தத்துவ நூல்களின் மொழிபெயர்ப்பு சுதந்திரமாக நடைபெறவில்லை.
இதனால் அதன் சித்தாந்தத்தைப் புரிந்து கொள்வதில் குழப்பம் ஏற்பட்டது.
ஆனால், கம்யூனிச சித்தாந்த நூல்களை தமிழில் புரியும்படி எளிய நடையில் மொழி
பெயர்த்துள்ளார். காந்தியவாதிகளுக்கு நிகராக கம்யூனிஸ்டுகள்
நேர்மையானவர்கள். போராட்டமே அவர்களது வாழ்க்கையாக இருக்கிறது. இருவரும்
நாட்டின் இரண்டு கண்களாக இருóக்கின்றனர். காந்தியடிகள் காரைக்குடி வந்தபோது
அவர் கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவாவை சிராவயலுக்குச் சென்று சந்தித்தார்.
இந்தியாதான் எனது சொத்து என்றார் ஜீவா. நீங்கள்தான் இந்தியாவின் சொத்து
என்றார் காந்தி. அந்த அளவுக்கு பெருமை பெற்றவர் ஜீவாவின் வளர்ப்பு மகன்
நா.தர்மராஜன். கம்யூனிசமும் காந்தியமும் அவரிடம் உள்ளது. இந்திய மொழி
நூல்களை அவர் மொழிபெயர்த்தால் அவருக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைப்பது
நிச்சயம் என்றார்.
நிகழ்ச்சியில், காந்தி நினைவு அருங்காட்சியகச் செயலர் மா.பா.குருசாமி,
நெல்லை வணிக வரி இணை ஆணையர் பா.தேவேந்திரபூபதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
நா.தர்மராஜன் ஏற்புரையாற்றினார். தமிழ்நாடு சர்வோதய இலக்கியப் பண்ணைத்
தலைவர் மா.பாதமுத்து தலைமை வகித்தார். தமிழ்நாடு சர்வோதய மண்டல் தலைவர்
க.மு.நடராஜன் வரவேற்றார். சர்வோதய இலக்கியப் பண்ணை செயலர் வே.விஜயராஜன்
நன்றி கூறினார்.
0 comments:
Post a Comment