தாளவாடியில் சாணியடித் திருவிழா
சத்தியமங்கலம், அக். 25: ஈரோடு மாவட்டம், தாளவாடி, கும்டாபுரத்தில் சனிக்கிழமை சாணியடித் திருவிழா நடைபெற்றது.
தாளவாடி அருகே உள்ள கும்ட்டாபுரம் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை
வாய்ந்த பீரேஸ்வரர் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இக்கோவிலில் தீபாவளி
பண்டிகையை அடுத்துவரும் 4-ஆவது நாள் சாணியடித் திருவிழா கொண்டாடப்படுவது
வழக்கம். அதன்படி, இந்தாண்டுக்கான விழா சனிக்கிழமை காலை சிறப்பு பூஜைகளுடன்
தொடங்கியது. முன்னதாக கிராமத்தில் உள்ள அனைத்து பசுமாடுகளின் சாணங்கள்
சேகரிக்கப்பட்டு கோவிலின் பின்புறம் குவித்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து, ஊர்குளத்தில் இருந்து கழுதை மேல் சுவாமியை வைத்து ஊர்வலமாக
கோவிலுக்கு அழைத்து வந்தனர். இதையடுத்து, ஊர் தெய்வமான பீரேஸ்வரருக்கு
சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன. ஆண்கள் மேலாடை அணியாமல்
கோவிலுக்குள் சென்று சிறப்பு பூஜைகள் செய்தனர்.
பின்னர், அங்கு கொட்டி வைக்கப்பட்டிருந்த சாணத்தை உருண்டைகளாகச் செய்து
அங்கு கூடியிருக்கும் பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் மீது சாணத்தை வீசி
மகிழ்ந்தனர். இப்பாரம்பரிய நிகழ்ச்சிக்குப்பின் பக்தர்கள் அனைவரும்
குளத்தில் நீராடி, பீரேஸ்வரரை வழிபட்டனர்.
இதுகுறித்து விழாக் கமிட்டியினர் கூறியது:
சில நூறு ஆண்டுகளுக்கு முன் இக்கோவிலில் உள்ள சிவலிங்கத்தை பக்தர்
ஒருவர் எடுத்துச்சென்று சாணங்கள் கிடக்கும் குப்பை மேட்டில்
எறிந்துவிட்டார். ஒருநாள் மாட்டு வண்டி குப்பைமேட்டின் மீது
ஏறிச்செல்லும்போது, ஒரு இடத்தில் ரத்தம் வழிந்துள்ளது.
அதைக்கண்ட மக்கள் அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தபோது அங்கு சிவலிங்கம்
இருந்தது தெரியவந்தது. அப்போது ஒரு சிறுவனின் கனவில் வந்த சுவாமி, தீபாவளி
முடிந்த நான்காவது நாள் சாணத்திலிருந்து தான் மீண்டெழுந்ததன் நினைவாக சாணியடித் திருவிழா நடத்தவேண்டும் எனக் கூறினாராம். இதையடுத்து,
மூதாதையர் வழிகாட்டுதலின் படி, இந்த விழாவைக் கொண்டாடி வருகிறோம் என்றனர்.
0 comments:
Post a Comment