பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்தியில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது
சத்தியமங்கலம்,
செப்.3. சத்தியமங்கலம் பஸ்நிலையம் அருகே சத்தியமங்கலம் & மைசூர்
நெடுஞ்சாலையில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் சுப்பிரமணியம்
தலைமையில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், சிபிஐஎம், இந்திய ஜனநாயக
வாலிபர் சங்கம் மற்றும் ஜனநாயக மாதர்சங்கத்தை சேர்ந்த பெண்கள் உட்பட 50
க்கும் மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியல்
போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை திரும்ப
பெறவேண்டும், தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் வேலை நாட்களை 200 ஆகவும்,
கூலியை ரு.300 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும், கரும்பு விவசாயிகளுக்கு
நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும், அரசு உத்தரவு வழங்கியும் நிறுத்தி
வைக்கப்பட்டுள்ள முதியோர் ஓய்வூதியத்தை தொடர்ந்து வழங்க வேண்டும்,
சத்தியமங்கலம் பகுதியில் சென்ட் தொழிற்சாலை அமைத்து மலர் விவசாயிகளை
பாதுகாக்க வேண்டும், வனவிலங்குகளிடமிருந்து விவசாயப்பயிர்கள் மற்றும் மனித
உயிர்களை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
கோஷமிட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சத்தியமங்கலம் டிஎஸ்பி
மோகன் தலைமையிலான போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி தனியார் திருமண
மண்டபத்தில் அடைத்தனர். இதே போல் புஞ்சைபுளியம்பட்டி பஸ் நிலையம் முன்பு
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பவானிசாகர் ஒன்றிய செயலாளர் மதன்குமார்
தலைமையில் 25 க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை புஞ்சைபுளியம்பட்டி இன்ஸ்பெக்டர்
சுந்தரமுர்த்தி தலைமையிலான போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி நகராட்சி
திருமண மண்டபத்தில் அடைத்தனர். கடம்புர் பஸ்நிலையம் அருகே மாவட்ட விவசாய
சங்க தலைவர் முனுசாமி தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 125 பேர்
கலந்து கொண்டனர். காடுபசுவன்மாளம் பஸ்ஸ்டாப்பில் மலைவாழ் மக்கள் சங்க மலை
வட்டார செயலாளர் சடையப்பன் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 212
பேர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து
சமுதாயக்கூடத்தில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலை 5 மணிக்கு
விடுவிக்கப்பட்டனர்.
0 comments:
Post a Comment