தரமற்ற கசிவு நீர்த் தடுப்புச் சுவர் கட்டுமானப் பணியை நிறுத்திய விவசாயிகள்
புஞ்சைபுளியம்பட்டி அருகே தடுப்பணையில் இருந்து வெளியேறும் கசிவுநீரை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட தடுப்புச் சுவரின் கட்டுமானப் பணியில் தரம் இல்லை எனக் கூறி அப் பகுதி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, கட்டுமானப் பணியையும் அவர்கள் தடுத்து நிறுத்தினர்.
சத்தி, தேசிபாளையம் ஊராட்சி கருப்பகவுண்டன்புதூரில் உள்ள தடுப்பணையில் மழைநீர் தேங்காமல் வீணாகிவிடுவதாகவும், அணையில் பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டும் எனவும் உள்ளாட்சி நிர்வாகத்திடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, தடுப்பணையில் தடுப்புச் சுவர் கட்டுமானப் பணி திங்கள்கிழமை துவங்கியது. தடுப்புச் சுவரை ஒட்டியுள்ள மண்ணை அகற்றிவிட்டு, புதிதாக குழிதோண்டி கான்கிரீட் போடுவதற்கு பதிலாக மண்ணை அகற்றாமல் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதைப் பார்த்த விவசாயிகள் கண்டித்தனர். இதுகுறித்து தகவல் தெரிவித்தும் சம்பவ இடத்துக்கு வராத தேசிபாளையம் ஊராட்சித் தலைவரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒப்பந்ததாரர் மற்றும் கட்டுமானப் பணியாள்கள் தொடர்ந்து பணி மேற்கொண்டதால், விவசாயிகள் திரண்டு பணியை தடுத்து நிறுத்தினர்.
அங்கு வந்த பவானிசாகர் ஒன்றியக் குழுத் தலைவர் வி.ஏ.பழனிச்சாமி, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தடுப்புச் சுவர் கட்டுமானப் பணியை பார்வையிட்டனர். சரியான அளவில் சிமெண்ட் கலவையில்லாமல் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்துமாறு அவர்கள் ஒப்பந்ததாரை கேட்டுக்கொண்டனர்.தடுப்பணை நீர் கசியாதபடி நிலத்தடியில் 5 அடிவரை மண்ணை தோண்டி எடுத்துவிட்டு கட்டுமானப் பணியை தொடங்குவதாக ஒப்பந்ததாரர் உறுதியளித்தையடுத்து விவசாயிகள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.
0 comments:
Post a Comment