புன்செய் புளியம்பட்டியில் இருந்து கோவைக்கு பாயிண்ட்- டு - பாயிண்ட் பேருந்துகளை இயக்க வேண்டும்
- விடியல் சமூகநல இயக்கம் கோரிக்கை
- விடியல் சமூகநல இயக்கம் கோரிக்கை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் புன்செய் புளியம்பட்டி அமைந்து உள்ளது. நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட இவ்வூரில் சுமார் 25000 இக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கிறார்கள். தமிழகத்தின் 2வது பெரிய சந்தை வியாழன்தோறும் இங்கு கூடுகிறது. அருகிலுள்ள சுமார் 35இக்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினசரி புளியம்பட்டி வந்து செல்கின்றனர். சத்தி, பவானிசாகர், பண்ணாரி, திருப்பூர், அவினாசி, அன்னூர், கோவை,மேட்டுபாளையம், நம்பியூர், கோபி ஆகிய பகுதிகளுக்கு செல்ல புன்செய் புளியம்பட்டி தான் மையபகுதியாக விளங்குகிறது.
இத்தகைய சிறப்பு மிக்க புன்செய் புளியம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நாள்தோறும் கோவைக்கு ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு கல்வி கற்க சென்று வருகிறார்கள். அதேபோல் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிய பொதுமக்களும் தினசரி கோவை சென்று வருகின்றனர்.
தற்போது சத்தியமங்கலத்தில் இருந்து கோவைக்கு பாயிண்ட் டு பாயிண்ட் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மிகவும் பரபரப்பான காலைநேரத்தில் பாயிண்ட் டு பாயிண்ட் பேருந்துகள் சத்தியமங்கலத்தில் இருந்து வரும் போதே நிரம்பி வருகிறது. இதனால் புன்செய் புளியம்பட்டியில் இருந்து கோவை செல்லும் மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். மேலும் ஒரே பேருந்தில் அளவுக்கு அதிகமான மாணவர்களும், மாணவியர்களும் ஏறுவதால் இடநெருக்கடி ஏற்படுகிறது. ஆண்களும், பெண்களும் படிக்கட்டில் தொங்கி கொண்டு பயணிப்பதால் விபத்து மற்றும் உயிர் இழப்புகள் ஏற்படுகிறது. புன்செய் புளியம்பட்டியில் இருந்து கோவைக்கு பாயிண்ட் டு பாயிண்ட் பேருந்துகள் இயக்கபட்டால் மாணவ மாணவியர்களும், பொதுமக்களும் கல்வி மற்றும் வேலை நிறுவனங்களுக்கு குறித்த நேரத்திற்கு செல்ல முடியும்,
எனவே மாணவ மாணவியர்கள் நலன் கருதி காலை, மாலை வேளைகளில் புன்செய் புளியம்பட்டியில் இருந்து கோவைக்கு கூடுதல் மற்றும் பாயிண்ட் டு பாயிண்ட் பேருந்துகளை இயக்க மாவட்ட நிர்வாகமும், சம்மந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகளும் ஆவன செய்ய வேண்டுமென மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் சார்பாக விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
0 comments:
Post a Comment