பகலில் இரவாக மாறிய திம்பம் மலைப்பாதை. கடும் பனிமூட்டத்தால் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்
சத்தியமங்கலம், டிச 15: சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதையில்
நேற்று பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்கமுடியாமல் தவித்தனர்.
சத்தியமங்கலத்திலிருந்து மைசூர் செல்லும் சாலையில் அடர்ந்த வனப்பகுதியில்
27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட திம்பம் மலைப்பாதை உள்ளது.
கடல்மட்டத்திலிருந்து 1105 மீட்டர் உயரத்தில் உள்ளதால் இங்கு ஊட்டி போன்று
கடுங்குளிர் நிலவுவது வழக்கம். கடந்த சில நாட்களாக குளிருடன்
கடும்பனிமுட்டம் உள்ளதால் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 11 மணி வரை
நீடிப்பதால் பஸ், லாரி, கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் மஞ்சள்நிற முகப்பு
விளக்குகளை எரியவிட்டபடி வாகன ஓட்டிகள் மெதுவாக இயக்கினர். இதனால்
வாகனங்கள் மலைப்பாதையில் வழக்கமாக அரைமணி நேரத்தில் கடக்கும் தூரத்தை அடைய
ஒருமணிநேரம் ஆகிறது. இதனால் இரவு நேரங்களில் திம்பம் மலைப்பாதை வழியாக
செல்லும் கனரக வாகனங்கள் பண்ணாரி மற்றும் ஆசனூர் சோதனை ச்சாவடிகளில் நின்று
பனிமூட்டம் விலகிய பின்பு புறப்பட்டு செல்கின்றன. இரவு நேரம் மற்றும்
அதிகாலையில் வேலைக்கு செல்பவர்கள் குளிர் காரணமாக பணிக்கு செல்லமுடியாமல்
தவிக்கின்றனர். மேகமூட்டமும் பனிப்பொழிவும் காலை 11 மணிவரை நீடிப்பதால்
சாலைகளில் எதிரேவரும் வாகனங்கள் தெளிவாக தெரியாமல் வாகனஓட்டிகள்
சிரமப்படுகின்றனர். திம்பம், ஆசனுர், கேர்மாளம் மற்றும் தாளவாடி ஆகிய
சுற்றுவட்டார மலைகிராமங்களில் விவசாயமே முக்கியத் தொழிலாக இருப்பதால் காலை
மற்றும் மாலை நேரங்களில் நிலவும் கடுங்குளிரால் தோட்டத்துக்கு தண்ணீர்
பாய்ச்ச முடியாமல் தவிக்கின்றனர்.
0 comments:
Post a Comment