- ஸ்டாலின் குணசேகரன்
விடியல் சமூகநல இயக்கம் மற்றும் நம்பியூர் அரிமா சங்கம் சார்பில் நம்பியூரில் முதல்முறையாக புத்தக திருவிழா நம்பியூர் காந்திபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நடைபெற்று வருகிறது.
மாலை நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்ச்சியில் விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் வரவேற்றார். குமுதா கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஜனகரத்தினம் தலைமை தாங்கினார். காமராஜ் பள்ளியின் தாளாளர் கருப்புசாமி, நுகர்வோர் பாதுகாப்பு மைய துணை தலைவர் சண்முகசுந்தரம், நம்பியூர் காவல்துறை ஆய்வாளர் விவேகானந்தன், அரிமா சங்க தலைவர் வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஈரோடு மக்கள் சிந்தனை பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசும் போது புத்தகங்கள் தனி மனித வாழ்கைக்கு மட்டுமல்ல சமுதாய முன்னேற்றத்துக்கும் காரணமாக இருக்கின்றன. ஒரு புத்தகம் மனிதனின் வாழ்வை மாற்றி விடும். மாணவர்கள் மீது நாம் அளவற்ற நம்பிக்கை வைக்க வேண்டும். மாணவர்களை மட்டும் நாம் சரியாக வழிநடத்தினால் அவர்களை விட சிறந்தவர்கள் யாரும் இருக்க முடியாது. மாணவ மாணவியர்கள் பாட புத்தகத்தோடு பிற புத்தகங்களை படிக்க வேண்டும். பாடபுத்தகங்களை படிக்கும் போது அறிவாளியாகலாம். பாடம் அல்லாத புத்தகங்களை பாதிக்கும் போது நல்ல மனிதன் ஆகலாம். மாணவர்களை பண்படுத்தும், பக்குவபடுத்தும் ஆயுதம் புத்தகம். அடுத்த தலைமுறை கையில்தான் இந்த சமுதாயம் இருக்கிறது. புத்தகங்களை வாசிக்கும் போது ஈடுபாட்டோடு மனபூர்வமாக வாசிக்க வேண்டும். ஒவ்வொரு மாணவனும் இல்லந்தோறும் சிறிய நூலகம் அமைக்க முயற்சி செய்ய வேண்டும். ஏனென்றால் நல்ல நூல்கள் நமக்கு நண்பன்.
உலகில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட நூல் பைபிள். அடுத்த இரண்டாம் இடம் குரான். மூன்றாம் இடத்தில் இருப்பது திருக்குறள். திருக்குறளில் இல்லாத விசயங்களே இல்லை. அய்யன் திருவள்ளுவரால் 2000 ஆண்டுகளுக்கே முன்பே நம் வாழ்கைக்கு வேண்டிய அத்தனை விசயங்களையும் தந்த நூல் திருக்குறள். திருக்குறள் இல்லாத வீடே இருக்க கூடாது. மாணவ மாணவியர்கள் திருக்குறளை முழுவதுமாக படிக்க வேண்டும். மலேசிய அரசாங்கம் திருக்குறளை தமிழில், ஆங்கிலத்தில், மலாய் மொழியில் அச்சிட்டு ஆண்டுதோறும் மாணவ மாணவியர்களுக்கு இலவசமாக வழங்குகிறது. நம் தாய்மொழியில், தமிழ் மொழியில் திருக்குறளை படிக்கும் இனிமை, இன்பம் மொழிபெயர்ப்பு நூலில் கிடைக்காது.உலகுக்கே வழிகாட்டியாக திகழ்வது திருக்குறள் தான். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நல்ல நூல்களை வாங்கி தர வேண்டும். நம் மண்ணின் அருமை பெருமைகளை, சுதந்திர இந்தியாவின் வரலாற்றை, நம் கலாசாரத்தை அறிந்து கொள்ள தேடி தேடி நூல்களை படிக்க வேண்டும். நம்பியூர் புத்தக திருவிழாவை அனைத்து பொதுமக்களும், மாணவ மாணவியர்களும் முழுமையாக பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்றார்.
நிறைவாக நம்பியூர் அரிமா சங்க பட்டைய தலைவர் வெங்குடுசாமி நன்றி கூறினார்.
0 comments:
Post a Comment