மோடியுடன் நடிகர் விஜய் சந்திப்பு
மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்காக புதன்கிழமை கோவை வந்த பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை நடிகர் விஜய் சந்தித்துப் பேசினார்.
தமிழகத்தில் வரும் 24-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு
நடைபெறுகிறது. பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து
நரேந்திர மோடி பிரசாரம் செய்து வருகிறார். 14-ஆம் தேதி சென்னை வந்த மோடி,
நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பும், அதன் பிறகு செய்தியாளர்களிடம் நடிகர் ரஜினிகாந்த்
பேசியதும், தற்போதைய அரசியல் சூழலில் மிகவும் முக்கியத்துவம் பெற்றன.
மேலும், இந்தச் சந்திப்பு, பாஜவுக்கு ரஜினி ஆதரவு தெரிவிக்கும் விஷயமாகவும்
கருதப்பட்டது.
இந்நிலையில், புதன்கிழமை கோவையில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில்
பங்கேற்க, ஹெலிகாப்டர் மூலமாக வந்தார் மோடி. பிறகு, அங்கிருந்து அவினாசி
சாலை சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் ஹோட்டலுக்குச் சென்றார்.
அவரது வருகைக்கு முன்னரே நடிகர் விஜய் அந்த ஹோட்டலுக்கு வந்திருந்தார்.
புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு சென்னையிலிருந்து விமானம் மூலமாக கோவை வந்த
விஜய், உடனடியாக மோடி தங்கும் ஹோட்டலுக்கு சென்றார்.
பிரசார மேடைக்கு விஜய் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த
ஹோட்டலில் இரவு 7.25 மணியளவில் தனது ரசிகர் மன்ற பொறுப்பாளர் புஷியானந்த்,
மக்கள் தொடர்பு பொறுப்பாளர் செல்வக்குமார் ஆகியோருடன் மோடியை சந்தித்தார்
விஜய். சுமார் 20 நிமிடங்கள் வரை இந்த சந்திப்பு நடந்தது.
பிறகு, விமானம் மூலமாக சென்னைக்கு புறப்பட்டார் விஜய். இந்த சந்திப்பு குறித்து யாரிடமும் அவர் எதுவும் பேசவில்லை.
கோவை மாவட்ட விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் கேட்டபோது, மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தெரிவித்தனர்.
இதற்கிடையில் கோவையில் மோடி பங்கேற்ற கூட்டத்தில் முன்னதாக பேசிய பாஜக
மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், எங்களுக்கு ஏற்கெனவே ரஜினி ஆதரவு
கிடைத்துள்ளது; இப்போது விஜய்யின் ஆதரவும் கிடைத்துள்ளது என்று பேசியது
குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment